புவன :
என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்! இது வாணகோவரையர் தங்களிடம்
மாறுபட்டிருப்பதால் அவருடைய மகளை நம்பலாமா என்ற
ஐயப்பார்வையோ!
இராசராசர் :
என் பார்வை ஐயப் பார்வை யன்று; ஆய்வுப் பார்வை.
வாணகோவரையரைப்பற்றி அமைச்சர் கூறியபோது நான் உன் வதனத்தைக்
கவனித்தேன்! அங்கே வாட்டம் குடி கொள்ளும் என எண்ணினேன்;
தந்தையின் குறை கேட்டுப் பெற்ற மகள், வருத்தம் உற்ற மகளாவது
இயல்பே! ஆனால் என்ன வியப்பு! வருத்தம் தோன்றுவதற்குப் பதில்
வெறுப்புத் தோன்றியது! தேவி, அமைச்சரின் சொல் உன் செவியில்
வேப்பஞ்சாறாய்ப் பாய்ந்ததை முகமே விளம்பியது. கொண்ட கொழுநன்
நலனுக்காகக் கொடுத்த தாதையை வெறுக்கும் குலமகள் நீ! உன்னைக்
கைப்பிடித்த நான் எத்தனை சோதனை வந்தாலும், துன்பம் நேர்ந்தாலும்
கவலைப்பட மாட்டேன்! என்னருகே நீ யிருக்க இன்னல் நெருங்குமா?
புவன :
புகழ்ச்சி போதும்! நம் செல்வன் இராசேந்திரன் எங்கே? காலை
முதல் அவனைக் காணவில்லையே!
இராசராசர் :
படைத்தலைவன் சேதிராயனோடு அனுப்பியிருக்கிறேன். பல
ஊர்களில் சிதறிக்கிடக்கும் நம் படையின் அடவும் திறனும் துல்லியமாக
அறிந்துவர ஆணையிட்டுள்ளேன். சில தினங்களில் திரும்பி வருவான்.
புவன :
பெருமானே, முடிசூட்டு விழாவில் சூடிய மாலை இன்னும்
வாடவில்லை! அதற்குள்ளே போர் மாலை சூடப் போகிறீர்களா?
இராசராசர் :
தேவி. அமைதியே என் குறிக்கோள்! ஒருவரை ஒருவர்
அடுதலும் தொலைதலும் தொலைய |