பக்கம் எண் :

காட்சி - 327

  கண்ணா! பட்டினப்பாலை ஒரு கவிதைச் சிற்பம். அதிலே ஓரெழுத்தை

  மாற்றுவது, சிற்பத்தின் ஓர் உறுப்பைச் சிதைப்பதற்கு ஒப்பாகும்.
  அப்பிழையைக் கண்டதும் நீங்கள் பெருங்கோபம் கொண்டது அறமே! என்
  பிழைப்பாட்டைக் கேட்டிருந்தால், கடியலூர் உருத்திரங் கண்ணனாரின்
  வீட்டுக் குழவிக்கல்லும் உயிர் பெற்று வந்து என் தலையிலே மோதி அதை

  உடைத்திருக்கும். அஃறிணைக் கல்லே இப்படிச் செய்யும் போது, ஆறறிவு
  பெற்ற நீங்கள் சீறியதில் தவறேது?

தா. கண்ணன் ; அன்னம், பட்டினப்பாலையை முற்றிலும் கற்றாயா?

அன்னம் ; கற்றேன்! கரையிலா மகிழ்ச்சி உற்றேன்! பெற்றேன், பாலைப்
  பாட்டு நறுந்தேன்! பாடல் இனித்தது! பாடலின் அடி இனித்தது! அடியில்
  வாய்ந்த சீர் இனித்தது! சீரிலே செறிந்த அசை இனித்தது! அசையிலே
  இசைந்த எழுத்து இனித்தது! அந்த இனிமை, ஊன் கலந்து உயிர் கலந்து
  உவட்டாமல் தொடர்ந்தது!

தா. கண்ணன் : அன்னப் பெண்ணே, இன்னும் என்ன சிறப்புக் கண்டாய்?

அன்னம் : (தன்னை மறந்த உவகையளாய்) உருந்திரங் கண்ணனார் தீட்டிய
  உயிரோவியங்கள் இதோ என் கண் முன்னே உயிர் பெற்று உலவுகின்றன!
  இதோ வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற்காவிரியின்
  புனல் பரந்து பாய்கிறது! காய்ச் செந்நெல் கதிரருந்திய மோட்டெருமையில்
  முழுக் குழவி நெற்கூட்டின் நிழலிலே நீள் துயில் கொள்கிறது.
  உணங்குஉணாக் கவரும் கோழிகளை விரட்ட, பேரிழை மகளிர் எறிந்த
  மகரக் குழைகள் பறந்து சென்று, பொற்காற் புதல்வர் புரவியின்றி