பக்கம் எண் :

28வளவன் பரிசு

  உருட்டும் முக்கால் சிறுதேரின் சக்கரத்தில் சிக்குகிறது! சோறு வாக்கிய
  கொழுங்கஞ்சி, யாறு போலப் பரந்தொழுகி, ஏறுபொரச் சேறாகி, தேரோடத்
  துகள் கெழுமி. வேறுபட்ட வினை ஓவத்து வெண் கோயிலை, நீறாடிய களிறு
  போல மாசுறச் செய்கிறது! புன்றலைப் பரதவர், பைந்தழை மகளிரோடு
  மலியோதத் தொலிகூடல் தீது நீங்கக் கடலாடிப் பின் மாசுபோகப் புனல்
  படிகின்றனர்!

தா. கண்ணன் : (எல்லை கடந்த மகிழ்ச்சியோடு) அன்னம்! அன்னம்!
  வளிக்கும் வலிக்கும் வேற்றுமையறியாத நீயா பட்டினப்பாலையின்
  சித்திரங்களை இப்படித் தீட்டிக் காட்டுகிறாய்...ஆ, உன்னை எவ்வாறு
  பாராட்டுவது? அன்னம்! அன்னம்!

     [தாமரைக்கண்ணன் தாவியெழுந்து அன்னத்தை 
       அணைத்துக்கொள்கிறான். அணைப்பிலே சில நொடி தன்னைப்
       பிணைத்துக்கொண்ட அன்னம் மெல்ல அவன் பிடியிலிருந்து
       விடுபடுகிறாள்.]

அன்னம் : (பொய்க்கோபத்துடன்) சோலையின் நடுவே பலருக்கும் முன்னே
  நீங்கள் பாராட்டும் அழகு, நன்றாய் இருக்கிறது! அப்புறம். எனக்குச் சினம்
  பிறக்கும்.

தா. கண்ணன் : அன்னம் சினந்தால் கன்னம் சிவக்கிறதே! உள்ளொன்று
  வைத்துப் புறமொன்று பேசல் உத்தமக் காதலுக்கு மெத்தவும் அழகு போலும்!

அன்னம் : காதலுக்காக வரவில்லை கவிஞரே! கற்றதைச் சற்றே காட்ட
  வந்தேன்! கற்பனை பெருக்க வேண்டாம்!