பக்கம் எண் :

காட்சி - 541

தனபதி : உனக்கு இது எதற்கு?

அன்னம் : அப்பா, கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய இனிய பாட்டு
  இது. இதைப் படித்தால் கிடைக்கும் இன்பம், பால் பழம் உண்டாலும்,
  பட்டுடை பூண்டாலும், பசும் பொன் அணிந்தாலும் கிடைக்காது! தமிழ்ச்
  சுவையே தனிச்சுவை.

தனபதி : உருத்திரங்கண்ணனார்...அன்னம், இப்போதுதான் நினைக்கு
  வருகிறது. வைரவணிகர் சாத்தப்பர் சொன்னார். உன்னை நம்மூர்ச்
  சோலையில் யாரோ ஒரு புலவர் குடும்பத்து இளைஞனோடு அடிக்கடி
  பார்க்கிறாராம். அந்த இளைஞன் பெயர்கூட ஏதோ கண்ணன் என்றாரே.....

அம்பலம் : தாமரைக்கண்ணன் என்று சொன்னாருங்களா?
  [அன்னம் அம்பலத்தை முறைக்கிறாள்]

தனபதி : ஆமாம். அதே பெயர்தான், உனக்கெப்படித் தெரியும்?

அம்பலம் : (விழித்து) எனக்கெப்படித் தெரியும்? ஏதோ கண்ணன் என்றதும்
  தாமரைக்கண்ணனாயிருக்குமோ? என்று நினைத்தேனுங்க.

தனபதி : புலவர்கள் பொல்லாதவர்கள். பொருள் இருக்கிறவர்களைச் சுற்றி,
  ‘பரிசு பரிசு’ என்று அரித்துவிடுவார்கள். உறையூரின் பெருஞ்செல்வரில்
  நான் ஒருவன் என்பதை அறிந்துதான் அந்தக் கண்ணன் உனக்குக் கண்ணி
  வைக்கிறான். அன்னம், எச்சரிக்கையோடிரு.

அன்னம் : (சினத்தோடு) அப்பா, தாமரைக்கண்ணன் பணத்தின் பின்னே
  செல்லும் பஞ்சப்புலவன் அல்ல.