பக்கம் எண் :

44வளவன் பரிசு

 ஒளிபரப்புகின்றன. அரசியின் விழிகள் அடிக்கடி அறை வாயிலை நோக்கித்
 திரும்புகின்றன. யாரோ நடந்துவரும் ஓசை கேட்டு அரசி எழுகிறாள்.
 அதற்குள் இராசராசரும் இராசேந்திரனும் உள்ளே வருகிறார்கள்.]

இராசராசர் : பார்த்தாயா, இராசேந்திரா! நான் உன்னிடம் சொன்னதுபோல
 உன் அன்னை உண்ணாமல் உறங்காமல் நமக்காகக் காத்திருக்கிறாள்.

புவனமுழுதுடையாள் : காத்திருப்பது தெரிந்தும் என்னைக் காக்கவைப்பதில்
 திருப்தி அடைகிறார் அரசர், அப்படித் தானே?

இராசராசர் : இல்லை தேவி. காத்திருப்பதை அறிந்து உரிய நேரத்தில்
 ஓடிவரத்தான் விரும்பினேன். அரசாங்கப்பணி என்னை
 அடிமைப்படுத்திவிட்டது. மன்னராகப் பிறப்பது துன்பமேயன்றித்
 தொழுந்தகைமை பெற்றதன்று.

புவன : உங்களுக்குத்தான் நேரம் கழித்து உண்பதும், உறங்குவதும்
 பல்லாண்டுப் பழக்கம். சிறுவன் இராசேந்திரனையும் இப்படித்
 தொல்லைப்படுத்த வேண்டுமா? இராசேந்திரா! உன் தந்தைக்குத்தான்
 அரசாங்கப் பணியே உடல், பொருள், ஆவி! உனக்கென்ன? நீ நேரம்
 தாழ்த்தாமல் உரிய நேரத்தில் உண்ணக்கூடாதா?

இராசேந்திரன் : அம்மா, நான் தந்தையுடனிருந்து பயிற்சி பெற
 வேண்டாமா? நான் இந் நாட்டு இளவரசன். அரசரின் பணியில் எனக்கும் சரி
 பங்குண்டு.


புவன : தந்தையார் என்ன பயிற்சி தருகிறார்? நள்ளிரவில் உண்டு,
 அதன் பின் உறக்கம் வராமல் ஓரிரு