பக்கம் எண் :

46வளவன் பரிசு

  அத்திட்டத்தைத் தந்தையார் கொஞ்சம் விரிவுபடுத்தியிருக்கிறார், அவர்
  மாறுவேடத்தில் இந்தநாட்டையே வலம் வரப்போகிறார்.

புவன : நாட்டைச் சுற்றிவர நாள் பல ஆகுமே!

இராசராசர் : ஆமாம் தேவி! பல நாளாகும்! இதற்குப் பதைபதைப்பது ஏன்?
  கற்றுத் துறை போகிய உனக்கு அரசர் கடமைகள் தெரியாதா?
  மனைவியாகப் பேசாமல் மகாராணியாகப் பேசு!

புவன : நாட்டு நிலைமையை அறிந்து கூறுவது ஒற்றர் கடமையல்லவா?

இராசராசர் : உண்மைதான்! இப்போது சோழ நாடு மிகவும் கவலைக்குரிய
  நிலையிலுள்ளது. மக்கள் முன் போல நாட்டுப் பற்றுள்ளவர்களாக,
  மன்னனைத் தங்கள் கண்ணென மதிப்பவர்களாக இல்லை என்று ஒற்றர்கள்
  கூறுகிறார்கள். அயல் நாட்டானின் படையினும் தீமைபயப்பது உள்நாட்டு
  மக்களின் பற்றற்ற மனப்பான்மை. ஒற்றர் உரைப்பது உண்மையா? நாட்டு
  மக்களுக்கு இந் நாட்டின் உயர்வுதாழ்வில் அக்கறையில்லையா? இல்லை
  என்றால் ஏன் இல்லை? இந்த நிலையை நீக்குவது எப்படி? -
  இவ்வளவையும் நானே நேரில் அறிந்து கொள்ள விரும்புகிறேன். முதலில்
  அமைச்சர் பிருமாதிராயர் தாமே நாட்டைச் சுற்றிப் பார்த்து வருவதாகக்
  கூறினார். அதை மறுத்து நானே நேரில் செல்ல முடிவு செய்தேன்.

புவன : அமைச்சரையும் உடன் அழைத்துச் செல்கிறீர்களா?

இராசராசர் : இல்லை.

புவன : தனியாகவா செல்லப் போகிறீர்கள்?