உனக்கும் என்னால் முடிந்த பொருளுதவி செய்ய வேண்டும் என்று
விரும்புகிறேன். நீ என்னைப்
பற்றி ஒரு பாட்டுப்பாடு.
தா. கண்ணன் :
(சிரித்து) வணிகரே, உறையூரில் புலவர்களை ஆதரித்துப்
பெரும்பொருள் வழங்கிய
வள்ளல்கள் பலர் உண்டு. அவர்களுள் வணிகர்
சிலர் உண்டு. நானறிந்தவரையில் நீங்கள்
புலவரை ஆதரித்ததாகத்
தெரியவில்லை. புலவர்பாடும் புகழ்க்குணங்கள் உம்மிடம்
பொருந்தியிருப்பதாக
நான் கேள்விப்பட்டதில்லை!
தனபதி :
தம்பி, நீ சும்மா பாடவேண்டாம் நீ என்னைப் பற்றிப்பாடும்
பாட்டுக்கு நூ...று
பொன் பரிசு தருகிறேன்.
தா. கண்ணன் :
வணிகரே பொன்னைப் பெற்றுப் பாடலை விற்கும்
தமிழ்விலை வணிகனல்லன், தாமரைக்
கண்ணன். நூறு பொன்னுக்குப் பாட
வேறு புலவரைத் தேடும்.
[தாமரைக் கண்ணன் எழுந்து கொள்கிறான்]
தனபதி :
இரு தம்பி! இரு! பொன் வேண்டாம் என்றால் விடு. பொன்
பெறாமல்தான் ஒரு பாடல்
பாடேன்!
தா. கண்ணன் :
உம்மைப் பற்றியா?
தனபதி :
ஆமாம். என்னைப்பற்றித்தான். வணிகரைப் பாடக்கூடாது என்பது
உன் கொள்கையா?
தா. கண்ணன் :
ஐயா, வணிகரே, வணிகர்க்குரிய கடமைகளைத் தவறாது
செய்யும் செம்மல்களை
வாயாரப் புகழ்வது புலவரின் வழக்கம். |