கொலை கடிந்தும் களவு நீக்கியும்
அமரர் பேணியும் ஆகுதி யருத்தியும்
நல்லானொடு பகடோம்பியும்
நான்மறையோர் புகழ்பரப்பியும்
பண்ணியம் அட்டியும் பசுபதம் கொடுத்தும்
புண்ணியம் முட்டாத் தண்ணிழல் வாழ்க்கை
என்று வணிகரின் வாழ்க்கையைச் சிறப்பித்தவர், எம் முன்னோரான
உருத்திரங் கண்ணனார்.
‘நடுவு நின்ற நன்னெஞ்சினோர்’ என்றும்
அவர் வணிகப் பெருமக்களை நாவாரப் பாராட்டினார்.
வணிகரே, உமது
வாழ்க்கை இத்தகையது தானா? நீங்கள் நடுவு நின்ற நன்னெஞ்சினரா?
எண்ணிப்
பாருங்கள்! ஓதல், வேட்டல், கொடுத்தல், பசுகாத்தல், உழுது
பயிர் செய்வித்தல், வாணிகம்
என்னும் ஆறும் வாணிகர்க்குரிய
தொழில்கள்! இவற்றில் வாணிகம் தவிர பிறவற்றை அறிவீரா?
வாணிகமும் நடுவு நீங்கிய வாணிகம்! ஒன்றின் விலையைப் பன்மடங்காக
உயர்த்திக் கூறிப்
பொருள் பறிக்கும் வாணிகம்! உம் போன்ற வணிகரை
எம் போன்ற புலவர் பாடார்!
தனபதி :
தம்பி, நான் பொருளை அதிக விலைக்கு விற்பதாகச் சொல்லாதே!
என் கடையில்
விற்பனை மிகுதி! அதைக் கண்டு பொறாமை கொண்டு
யாரோ சிலர் உன்னிடம் உரைத்த
பொய்யை மெய்யாகக் கொள்ளாதே.
தா. கண்ணன் :
ஐயா சத்தியசீலரே, சில நாட்களுக்கு முன் உங்கள்
கடைக்கு வந்து நான் இரட்டைவட
முத்து மாலை ஒன்று வாங்கினேன்.
இருபது பொன் விலையாகப் பெற்றுக் கொண்டீர்கள். அதை
எனக்குத்
தெரிந்த முத்து வணிகரிடம் கொடுத்து மதிப்பிடச் சொன்னேன். அவர்
என்ன
சொன்னார் தெரியுமா? |