பக்கம் எண் :

60வளவன் பரிசு

  பட்டினப் பாலை அரங்கேற்றினார். வளவன் உள மகிழ்ந்து பதினாறு
  நூறுாயிரம் பொன் பரிசளித்தான். அது மட்டுமா? உறையூர்
  அரண்மனைக்குத் திலகம் போல, அழகாக, சிகரம்போல உயர்வாக
  அமைந்த இந்தப் பதினாறு கால் மண்டபத்தையும்
  உருத்திரங்கண்ணனார்க்கு உளமுவந்து அளித்தான் கரிகாலன் அளித்த
  இந்த மண்டபம் அன்று முதல் கண்ணன் மண்டபம் எனப் பெயர் பெற்று,
 
  சோழ மன்னர் புகழையும் எம் முன்னோர் புகழையும் பறைசாற்றி நிற்கிறது.


இராசராசர் : பட்டின பாலையைப் பாடியதைக் கேட்டேன்.
  மலையகழ்க்குவான், மாக்கடல் தூர்க்குவான், வானை வீழ்த்துவான்,
  வளியை மாற்றுவான் என்ற புகழுரை கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.
  என்றாலும் இவை உயர்வு நவிற்சி உரைகள் தாமே ! 

தா. கண்ணன் : சங்க காலத்துச் சான்றோர்கள் உள்ளதைப் பாடுவார்கள்;
  உணர்ந்ததைப் பாடுவார்கள், அணுவை அண்டமாக, புழுவைப் புலியாக
  வரம்பு மீறிப் புனைந்துரைக்க மாட்டார்கள்.

இராசேந்திரன் : நீ சொல்வதைப் பார்த்தால் மலையகழ்வதும், கடல்
  தூர்ப்பதும் உண்மைச் செயல்களாக வேண்டுமே!

தா. கண்ணன் : ஆமாம் கரிகாலன் புகழைப்பாடும்போது அவனது சோழ
  குலத்துதித்த வீரர் பலர் பெருமைகளையும் அவன் மீது ஏற்றிப்
  பாடியிருக்கிறார், என் முன்னோர் உருத்திரங்கண்ணனார்.


இராசேந்திரன் : தாமரைக்கண்ணா, நீ இப்போது சொன்னதை இன்னும்
  விளக்கிக் கூற வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த எளிய உழவனுக்கு.
  இலக்கியம் விளக்கும் அரிய செய்திகளை அறிந்து கொள்ளும் ஆசை
  எழுவதில் தவறில்லையே!