பக்கம் எண் :

காட்சி - 1069

  தொண்டைவற்றிவிட்டது என்று சத்தம் போட்டாய். அதனால் இந்தக்  
  குவளையில் மோர் கொண்டுவந்தேன். இந்தா, குடி.

  [அம்பலம் தன் கையிலிருந்த பையைத் திண்ணையில் வைத்துவிட்டுக்
  குவளையை ஆவலோடு வாங்கிக்கொள்கிறான்.]

அம்பலம் : அடடா! நீங்கள், புலவரா, வள்ளலா என்பது புரியவில்லையே,
  குறிப்பறிந்து மோர் கொண்டுவந்திருக்கிறீங்க! நீங்கள் கர்ணன்! நீங்கள்
  கரிகாலன்!

தா. கண்ணன் : வற்றிய தொண்டையோடு பாராட்டு வழங்க வேண்டாம்.
  மோரைப் பருகியபிறகு எதை வேண்டுமானாலும் பகரலாம்.

அம்பலம் : அப்படியே செய்கிறேன்.

  [அம்பலம் குவளையை உயர்த்தி மோரைப் பருகி முடிக்கிறான்.]

அம்பலம் : அருமையான மோர்! குளுமையான மோர்! வளமையான மோர்!
  வறட்சி போக்கும் மோர்!

தா. கண்ணன் : (சிரித்து) அம்பலம், கவிதை பாடுகிறாயா?

  அம்பலம் : பார்த்தீங்களா, பைந்தமிழ்ப் புலவர் வீட்டுப்படியை மிதித்ததும்
  பாட்டு வருகிறது.

தா. கண்ணன் : எங்கே இவ்வளவு தூரம்? அன்னம் அனுப்பினாளா?

  அம்பலம் : சின்னம்மாவுக்கு இப்போ என் துணை தேவையில்லைங்க.
  உங்களை எங்கே, எப்போது, எப்படிச் சந்திப்பது என்பதெல்லாம் தெரியும்.
  அதனால் என்னை அழைப்பதில்லை.