பக்கம் எண் :

காட்சி - 1491

இராசேந்திரன் : ஏதோ குரல் கேட்கிறதே விம்மிப் புலம்பும் சோகக் குரல்.
   இந்தப் பரிசில் மண்டபத்திலிருந்துதான் கேட்கிறது. யாரங்கே?

தாமரைக்கண்ணன் : இளவரசே என்னைத் தெரியவில்லையா? முதல்
  சந்திப்பிலேயே என்னை உம் நண்பனாக ஏற்றுக்கொண்டதை
  மறந்துவிட்டீர்களா?

இராசேந்திரன் : தாமரைக்கண்ணன் குரல்! தாமரைக்கண்ணா!

தா. கண்ணன் : இளவரசே...

    [பரிசில் மண்டபத்தின் நடுவேயிருந்த தாமரைக்கண்ணன் எழுந்து
    மண்டபத்தின் வாயிற்படியருகே வருகிறான் அங்கே நிலவொளிபால்
    போலப் பாய்ந்திருப்பதால் அவனைக்கண்டு மகிழ்கிறான் இளவரசன்!]

இராசேந்திரன் : தாமரைக்கண்ணா, உறையூரில் நுழைந்த நொடியிலிருந்து
  உன்னைத்தான் தேடினேன். உன் வீடு இருக்கும் இடத்தை அறிந்து
  அங்கும் சென்றேன்.

தா. கண்ணன் : என் வீட்டைக் கண்டீர்களா இளவரசே. அரசனின்
  மாளிகைக்கு நிகராக எழுந்து நின்ற எனது எழுநிலை மாடத்தைப்
  பார்த்தீர்களா?

இராசேந்திரன் : எழுநிலை மாடம் இடிபாடுகளாக இருந்த காட்சியைக்
  கண்டு கலங்கினேன். தாமரைக் கண்ணா, உன் வீட்டைத் தேடிச்
  செல்லும்போதே அது எரிந்தோ, இடிந்தோ சிதைந்திருக்கும் என்பது
  எனக்குத் தெரியும்; பாண்டியனின் பழிவாங்கும் வெறிச் செயலின்
  விளைவை - விபரீதத்தைப் பாதை