பக்கம் எண் :

காட்சி - 1497

   [இளவரசனின் புகழுரை கேட்டு அன்னத்தின் கன்னம் சிவக்கிறது.]

தா. கண்ணன் : உறையூர் நவமணி வணிகர் தனபதியாரின் புதல்வி! உடன்
  வந்திருப்பவன் வேலையாள் அம்பலம்.

இராசேந்திரன் : தனபதியார் செல்வி உன்னைத் தன்பதியாக்கிக் கொள்ள
  விரும்புகிறாளோ? எப்போது நீங்கள் தம்பதியாகப் போகிறீர்கள்!

தா. கண்ணன் : இளவரசே, முதலில் இந்த மண்டபம் நிலைக்கவேண்டும்.
  பிறகுதான் எனக்கு வாழ்க்கையும், வாழ்க்கைத் துணைவியும்! (அன்னத்தை
  நோக்கி) அன்னம், நீ எங்கே இங்கு வந்தாய்?

அன்னம் : பாண்டியர் படை வருவது தெரிந்ததும், என் தந்தை பிற
  வணிகர்களுடன் உறையூர்க் காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டார். நானும்
  என் தாயாரும் மற்ற மங்கையரைப்போல உறையூர்க் கோவிலை
  உறைவிடமாகக் கொண்டோம். பாண்டிய வீரர்களின் பாதம் படியாத இடம்
  இறைவன் திருக்கோயில் ஒன்றுதான் கோயிலின் அர்ச்சகர் இன்று
  மாலைதான் அரண்மனைப் பகுதியில் உள்ள கட்டடங்கள் எல்லாம்
  அழிக்கப்படுகின்றன என்று சொன்னார். கண்ணன் மண்டபத்திடம்
  உங்களுக்குள்ள காதல், என்னிடம் கொண்ட காதலினும் ஆயிரங்கோடி
  மடங்கு அதிகம் என்பது எனக்குத் தெரியுமே! அதனால் கண்ணன்
  மண்டபத்துக்கு என்ன நேர்ந்ததோ எனக் கவலைப்பட்டேன். அதைக்
  காண வந்தேன். வழியிலே அம்பலத்தைச் சந்தித்தேன். அவன் எனக்குத்
  துணை வந்தான். நல்ல வேளை, கண்ணன் மண்டபத்தை இடிக்கவில்லை.