பக்கம் எண் :

காட்சி - 1499

அன்னம் : இன்றமிழ்ப் புலவரே, இளவரசரே! இருவரும் கவலையற்றுப்
  புறப்படுங்கள்! நாளை நண்பகல் அல்ல. ஞாயிறு மறையும் வரை இந்த
  மண்டத்தைப் பாண்டிய வீரர்கள் நெருங்காமல் காப்பேன்! அவர்களின்
  நிழல்கூட இதன்மீது படியாமல் காப்பேன்! சென்று வாருங்கள்!

இராசேந்திரன் : பெண்ணே உன்னால் முடியுமா?

அன்னம் : இளவரசே, பெண்ணால் முடியாதது இந்தப் பேருலகில்
  ஏதுமில்லை. பெண் மென்மையானவள். அதனால் மென்மையைக்
  கொண்டே மேன்மையை ஆக்குவாள். உங்கள் பெயர் கொண்ட சோழ
  அரசர்க்கு, கங்கையும் கடாரமும் வென்ற காவலர்க்கு ஓர் அத்தை
  இருந்தாளே, தெரியுமா உங்களுக்கு?

இராசேந்திரன் : குந்தவை! வந்தியத் தேவரின் வாழ்க்கைத் துணைவி!

அன்னம் : குந்தவைப் பெண்ணின் அறிவைக் கண்டு ஆற்றல்மிக்க
  அதிகாரிகளெல்லாம் அதிர்ந்து போவார்களாமே! தந்தை சுந்தர சோழரைக்
  காட்டிலும், தம்பி இராசராசனைக் காட்டிலும் வியத்தகு அறிவு பெற்றவர்
  குந்தவை என்று தமிழ்நிலம் புகழ்ந்ததாம் இளவரசே. பெண்ணின்
  பெருமைக்கு அருமையான சான்று குந்தவை. அந்த அளவு அறிவுத் திறம்
  எனக்கில்லை; என்றாலும் நாளை மாலைவரை இந்தக் கண்ணன்
  மண்டபத்தைக் காப்பேன்! என் தாய் நாட்டு மண்ணின் மீது ஆணை!
  மண்ணைப் பொன்னாக்கும் பொன்னியின்மீது ஆணை! பொன்னிக்கு
  இருபுறமும் கரையமைத்த கரிகால்வளவன்மீது ஆணை! அந்த வளவன்
  புகழ் பாடிய புலவர் உருத்திரங்கண்ணார் மீது ஆணை! அவர் திருவாயில்
  மலர்ந்த பட்டினப் பாலைமீது ஆணை! நாளை கதிரவன் மறையும் வரை கண்ணன் மண்டபத்