4.6 தொகுப்புரை

இதுகாறும் தொல்காப்பியர் காலத் தமிழ்மொழியின் தொடரியலைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். தொடரில் எழுவாயாக வரும் பெயர்க்கும். அது கொண்டு முடியும் பயனிலையாகிய வினைக்கும் இடையே திணை, பால், இடம், எண் ஆகியவற்றில் இயைபு காணப்பட வேண்டும் என்பதைத் தொல்காப்பியர் நன்கு விளக்கிக் கூறியுள்ளார். ஏறத்தாழ 2300 ஆண்டுகட்கு முன்பு தொல்காப்பியர் கூறியுள்ள இந்தத் தொடரியல் கோட்பாடு தமிழ் மொழி வரலாற்றில் காலம்தோறும் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. இன்று நம்முடைய காலத் தமிழிலும் இது அப்படியே கடைப்பி்டிக்கப்பட்டு வருகிறது. ஒரு தொடரில் எழுவாய்கள் பலவாக வரும் போது, எழுவாய்தோறும் உம் கொடுத்துக் கூற வேண்டும் என்று தொல்காப்பியர் கூறியுள்ள விதியும் இன்றையத் தமிழின் தொடர் அமைப்பில் பேணப்படுகிறது. தொடரில் சொற்களின் வரன்முறை ஓர் இன்றியமையாத இடத்தைப் பெறுவதால் அதைப் பற்றியும் தொல்காப்பியர் கூறியுள்ளார். தொடரில் பொருள் மயக்கம் வரல் கூடாது என்பதை வற்புறுத்தியுள்ளார். பொருள் மயக்கம் வரும் இடங்களில் தொடர்ப் பொருளை மயக்கம் இல்லாமல் எங்ஙனம் தெளிவாக உணர்த்த வேண்டும் என்பது பற்றி விளக்கமாகக் கூறியுள்ளார். மேலும் அவர் காலத் தமிழில் வழங்கிய பல்வேறு தொடர்களைப் பற்றியும் சொல்லதிகாரத்தில் ஆங்காங்கே விளக்கிக் காட்டியுள்ளார். சுருங்கக் கூறின் தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் தமிழ் மொழியின் தொடரியல் கோட்பாடுகள் பலவற்றைத் திறம்பட ஆராய்ந்து கூறியுள்ளார் எனலாம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
வண்ணச் சினைச்சொல் என்றால் என்ன? ஒரு சான்று தருக.
2.
தமிழில் பெயரடை பெயருக்கு முன்னர் வருமா? பின்னர் வருமா?
3.
இராமன் வந்தான் என்ற தொடரில் உள்ள சொற்களை இடம் மாற்றினால் பொருள் மாறுமா? அதற்குக் காரணம் யாது?
4.
ஒரு தொடரில் இயற்பெயரும் சிறப்புப் பெயரும் சேர்ந்து வரும்போது அவற்றின் வரன்முறை யாது?
5.
மா வீழ்ந்தது என்னும் தொடரைப் பொருள் மயக்கம் இல்லாமல் எங்ஙனம் கூற வேண்டும்?
6.
புலி கொன்ற யானை என்னும் தொடரைப் பொருள் மயக்கம் இல்லாமல் எவ்வாறு கூற வேண்டும்?
7.
எழுவாய்த் தொடரில் பெயர் கொண்டு முடியும் பயனிலை எத்தனை வகைப்படும்?
8.
பெயரெச்சம் கொண்டு முடியும் பெயர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?