உதியஞ்சேரல் என்ற அரசன் பாரதப் படைகளுக்குப் பெருஞ்சோறு அளித்ததை முடிநாகராயர் இரண்டாம் பாட்டில் பாடியுள்ளார். பதிற்றுப்பத்தின் முதல் பத்து இச்சேர அரசன் மீதே பாடப்பட்டிருக்க வேண்டும். அப்பத்து இப்போது கிடைக்கவில்லை. இவன் சேர அரசர்களில் தொன்மையானவன் என்பது அறியப்படும். ஒன்பதாம் பாட்டில் முந்நீர்விழவின் நெடியோன் என்று பாண்டியனின் முன்னோன் ஒருவன் கூறப்படுகின்றான். இம்முன்னோன் வடிம்பலம்ப நின்ற (அடி அலம்ப நின்ற) பாண்டியன் எனப்பட்டவன் என்பர். கடல் பாண்டி நாட்டைக் கவராமல் காத்ததனால் இப்பெயர் பெற்றான் எனவும் கூறுவர். இப்பாண்டிய வேந்தன் முந்நீர்விழா என்ற கடல் தெய்வத்துக்குரிய விழாவைக் கொண்டாடியவன். இவனே பஃறுளி என்ற ஆற்றை வெட்டியவன் (பல் + துளி = பஃறுளி). இந்தப் பஃறுளியாறும், பலமலை அடுக்கங்களும் கடல் வெள்ளத்தால் மறைந்தன.
|