4.2 ஒன்றிய தளைகள்

எந்தச்சீர் நிலைச்சீராக நிற்கின்றதோ அந்தச்சீரின் ஈற்றசையே வந்த சீரின் முதலசையாக அமையுமானால் அவ்வகைத் தளைகளுக்கு ஒன்றிய தளைகள் என்று பெயர் - இது, பொது விதி.

இங்கு, எந்தச்சீர் என்றது இயற்சீர் அகவல் சீர், வெண்சீர், வஞ்சியுரிச்சீர் என்பவற்றையாகும்; வந்த சீரின் முதலசை என்றது நேர் அல்லது நிரையை ஆகும்.

இயற்சீர் அல்லது ஆசிரியவுரிச்சீரை வாய்பாட்டு வகையில் சொல்வதென்றால், `மாச்சீர்’ என்றும், `விளச்சீர்’ என்றும் குறிப்பிடல் வேண்டும். மாச்சீரும் விளச்சீரும் ஈரசைச்சீரின.

வெண்சீர் அல்லது வெள்ளையுரிச்சீர் என்பது வாய்பாட்டு வகையில் `காய்ச்சீர்’ எனப்பெறும். காய்ச்சீர் என்றாலே, அது நேரசையை இறுதியாகக் கொண்ட மூவசைச்சீர் நான்கு என்பதை நாம் அறிவோம்.

வஞ்சியுரிச்சீர் என்பதை வாய்பாட்டு வகையில் `கனிச்சீர்’ என்று வழங்குவர். கனிச்சீர் என்றாலே, அது நிரையசையை இறுதியில் கொண்ட மூவசைச்சீரைத்தாம் என்பதும், அது நான்கு என்பதும் நாம் அறிந்தவை தாம்.

4.2.1 நேர் ஒன்றாசிரியத்தளை

நேர் ஒன்று ஆசிரியத்தளை என்பதில் ஒன்று என்பது பொருந்து எனப் பொருள்படும்.

`காமர் சேவடி’ - இது குறுந்தொகைக் கடவுள் வாழ்த்தில் காணப்படுவது. இச்சீர்கள் இடம்பெற்ற பாட்டு, ஆசிரியப்பாவாம்.

நின்ற சீர் வந்த சீர்
காமர் சேவடி
கா ம ர் சே வ டி
நெ கு ஒ நெ கு கு
தனிநெடில் தனிக்குறில் ஒற்று தனி நெடில் இணைக்குறில்
நேர் நேர் நேர் நிரை
தேமா (வாய்பாடு) கூவிளம் (வாய்பாடு)
நேர் முன் நேர்
நேர் ஒன்றாசிரியத் தளை

நின்ற சீர் ஆசிரிய உரிச்சீர், வந்த சீரின் முதலசை நேர்அசை.

நேர் முன் நேர் நேர் ஒன்றாசிரியத்தளை. நின்ற சீரின் பெயரால் ஆசிரியத்தளை எனப்படுகின்றது; ஒன்றிய அசைகளின் பெயரால் விதந்து நேரொன்றாசிரியத்தளை எனப்படுகின்றது.

4.2.2. நிரை ஒன்றாசிரியத்தளை

தாமரை புரையும்

இதுவும் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்தில் இடம் பெறுவதே. ஆசிரியப்பாவின் முதலிரண்டு சீர்கள் இவை. `தாமரை’ - நின்ற சீர்; `புரையும்` வந்த சீர். இவ்விரண்டு சீர்களுக்கும் இடையே அமைந்த பந்தத்தைக் காண்போம்.

நின்ற சீர் வந்த சீர்
தாமரை புரையும்
தா ம ரை பு ரை யு ம்
நெ கு கு கு கு கு ஒ
தனிநெடில் இணைக்குறில் இணைக்குறில் தனிக்குறில் ஒற்று
நேர் நிரை நிரை நேர்
கூவிளம் (வாய்பாடு) புளிமா (வாய்பாடு)
நிரை முன் நிரை
நிரையொன்றாசிரியத் தளை

நின்ற சீர் ஆசிரிய உரிச்சீர்

நின்ற சீரின் இறுதி அசை நிரையசை

வந்த சீர் புரையும்

வந்த சீரின் முதல் அசை நிரையசை

நிரை முன் நிரை யென ஒன்றுகின்றது. ஆசிரிய உரிச்சீர் ஆகிய விளச்சீர் நின்று தன் இறுதியசையாகிய நிரையையே வரும் சீரின் முதலசையாகக் கொண்டு ஒன்றுகின்றது. எனவே, நிரையொன்றாசிரியத் தளை. ஆக நின்ற சீரின் பெயரால் ஆசிரியத்தளை எனப் பெறுகின்றது; ஒன்றிய அசைகளின் பெயரால் `நிரையொன்று’ என்னும் விதப்பினைப் பெற்று நிரையொன்றாசிரியத்தளை எனப்படுகின்றது.

4.2.3 வெண்சீர் வெண்டளை

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு

இது குறள் வெண்பா.

நின்ற சீர் வந்த சீர்
யாதானும் நாடாமால்
யா தா னு ம் நா டா மா ல்
நெ நெ கு ஒ நெ நெ நெ ஒ
தனி நெடில் தனி நெடில் தனிக்குறில் ஒற்று தனி நெடில் தனி நெடில் தனி நெடில் ஒற்று
நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
தேமாங்காய் (வாய்பாடு) தேமாங்காய் (வாய்பாடு)
காய் முன் நேர்
வெண்சீர் வெண்தளை

நின்ற சீர் யாதானும்; யாதானும் என்பது மூவசைச்சீர். மூவசைச்சீரில் `காய்’ என்னும் வாய்பாட்டை இறுதியில் கொண்ட சீர். `காய்’ எனும் வாய்பாட்டை இறுதியில் கொண்ட சீர்கள் நான்கு. இந்நான்கும் வெண்சீர் எனப்படும். எனவே, இங்கு நின்ற சீர் வெண்சீர் என்பது தெளிவு.

வெண்தளை என்பது வெண்பாவிற்குரிய தளையாகும். இங்கு வெண்தளையை உருவாக்கிய சீர் எது? வெண்சீர் தானே? எனவே, அது தோன்ற (உருவாக்கியமை தோன்ற) வெண்சீர் வெண்தளை எனப்படுகின்றது.

காய் என்னும் வாய்பாட்டையுடைய மூவசைச்சீரின் நேரசை, தன் முன் நேர் அசை வர ஒன்றி வெண்சீர் வெண்டளை ஆகின்றது. காய் முன் நேர்- வெண்சீர் வெண்டளை.

4.2.4 ஒன்றிய வஞ்சித்தளை

மந்தா நிலம் வந்தசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை தாள்மலர்மிசை
எனவாங்கு
இனிதிருந் தோங்கிய இறைவனை
மனமொழி மெய்களின் வணங்குதும் மகிழ்ந்தே

இது குறளடி வஞ்சிப்பா என்னும் வகையினது. மொத்தத்தில் வஞ்சிப்பாட்டு. நாம், ஒரு சோற்றுப்பதமாக இப்பாட்டில் வரும், வெண்சாமரை புடைபெயர்தர என வரும் ஓரடியைக் கொள்வோம்; தளை காண்போம்.

நின்ற சீர் வந்த சீர்
வெண்சாமரை புடைபெயர்தரச்
வெ ண் சா ம ரை பு டை பெ ய ர் த ர ச்
கு ஒ நெ கு கு கு கு கு கு ஒ கு கு ஒ
தனிக் குறில் ஒற்று தனி நெடில் இணைக் குறில் இணைக் குறில் இணைக் குறில் ஒற்று இணைக் குறில் ஒற்று
நேர் நேர்

நிரை

நிரை

நிரை நிரை
தேமாங்கனி (வாய்பாடு) கருவிளங்கனி (வாய்பாடு)
கனி முன் நிரை
ஒன்றிய வஞ்சித்தளை

எந்தச் சீர் நின்ற சீராக நிற்கின்றதோ அந்தச் சீரின் ஈற்றசையே வந்த சீரின் முதலசையாக அமையுமானால் அவ்வகைத் தளைகள் ஒன்றிய தளைகள் என்று பெயர்பெறும் என்றும், பாவில் எவ்வகைப்பாவுக்கு எந்தச்சீர் உரிமை பெற்றுள்ளதோ அந்த உரிமைச்சீரின் பெயரே தளைக்கும் பெயராம் என்றும் படித்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா? அந்த விளக்கம் பொருந்த மேல் அலகிட்டதனைப் பார்ப்போம்.

நின்ற சீர், `வெண் சாமரை’ என்பது. இது, மூவசைச்சீர், கனி என்னும் வாய்பாட்டுச் சொல்லில் முடிவது; வஞ்சியுரிச்சீர். கனி என்னும் வாய்பாடு கொண்ட இந்த நிரையீற்று மூவசை வஞ்சி உரிச்சீர், வரும் சீரின் முதலசையொடு (நிரை) ஒன்றுகின்றது.

இனிய மாணாக்கர்களே! இங்கு நின்ற சீர் எது? வஞ்சியுரிச்சீர். எனவே, அது, உண்டாக்கும் தளை, வஞ்சித்தளையாம். வஞ்சியுரிச்சீர் என்ற நின்ற சீரின் ஈற்றசை எது? நிரையசை. வந்த சீரின் முதலசை எது? நிரையசை. எனவே, நிரையொடு நிரையெனப் பொருந்தி - ஒன்றி வருகின்றன அல்லவா? ஆம் எனின், நிரை ஒன்றிய தளை எனலாம். நிரை யொன்றிய தளைகள் பிறவும் உள. இது, வஞ்சித்தளையுள் நிரை ஒன்றியது. ஆதலால், இவையெல்லாம் விளங்க, நிரையொன்றிய வஞ்சித்தளை என்று சொல்ல வேண்டியவர்கள் சுருக்கம் கருதி ஒன்றிய வஞ்சித்தளை என்றனர். ஒன்றிய வஞ்சித்தளை எனவே ஒன்றாத வஞ்சித்தளை என்று ஒன்று இருப்பது இனங்குறித்தல் அல்லது அருத்தாபத்தி வகையில் உணர முடிகின்றது.

இதற்கு முந்திய பாடத்தில் வெண்பா பற்றிய செய்திகளைக் கற்றீர்கள். இப்பாடத்தில் இரண்டாவதாக உள்ள ஆசிரியப்பா பற்றியும், நான்காவதாக உள்ள வஞ்சிப்பா பற்றியும் அறியவுள்ளீர்கள். மூன்றாவதாக உள்ள கலிப்பா பற்றிய செய்திகள் விரிவாக உள்ளதால் அதனை அடுத்த பாடத்தில் பயிலலாம். நிரல் முறையில் (வரிசை முறை) செய்யப்பெற்றுள்ள இம்மாற்றம் பாடங்களின் அளவு மிக நீளாமல் அமையவே என்பதை மனம் கொள்க. இறுதியில் மருட்பா பற்றியும் கூறப்படுகிறது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
புணர்ச்சி இலக்கணத்தோடு ஒருபுடை ஒப்புமை உடையது எதனுடைய இலக்கணம்?
2.
`தளை’ - என்ற சொல்லின் பொருளென்ன?
3.
தளையாவது யாது?
4.
ஒரு பாட்டில் நின்ற சீர் எது? வந்த சீர் எது? இடைநின்ற சீர்கள் என்னவாகின்றன?
5.
தளையின் பெரும் பிரிவுகள் எவை?
6.
ஒன்றிய தளைகள் எத்தனை? அவற்றின் பெயர்களைத் தருக.
7.
ஒன்றாத தளைகள் எத்தனை? அவை யாவை?