புதுவையைச் சேர்ந்த
கனகசுப்புரத்தினம், அங்கு வந்து தங்கிய
பாரதியாருடன் நட்புக் கொண்டார். அந்த நட்பு பக்தியாக மாறியது.
அவரும் பாரதிதாசன் ஆனார். அவரைப் பாவேந்தர் என்று தமிழ்
உலகம் கொண்டாடியது. தமிழ்மொழி, தமிழ்நாடு ஆகியவற்றின்
சிறப்புகளைப் பாடுவதில் பாவேந்தர் சிறப்புற்று விளங்கினார்.
பெண்கல்வி, பெண்விடுதலை, பெண்களுக்குச் சமவாய்ப்பு,
எல்லார்க்கும் கல்வி முதலிய முன்னேற்றப் பாதைகள் பற்றியும்,
மூடப் பழக்கவழக்கங்கள், சாதி வேறுபாடுகள், சாதிக்
கொடுமைகள், தீண்டாமை முதலியவை ஒழிக்கப்பட வேண்டும்
என்பது பற்றியும் அவர் அழுத்தமாகக் கவிதைகளில் எழுதினார்.
பத்திரிகை ஆசிரியராகவும், திரைப்படப் பாடல் ஆசிரியராகவும்,
சமூகச் சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய பாவேந்தர் இருபதாம்
நூற்றாண்டின் மிகச்சிறந்த கவிஞர்களுள் ஒருவர். அவருடைய
பாடல்களில் சிலவற்றைப் பற்றி இப்பாடத்தில் படித்தோம்.
|