2.2 தூது இலக்கியம்

பொருள் அடிப்படையில் அமையும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகிய தூது இலக்கியம் பற்றிப் பார்ப்போம்.

2.2.1 பெயர்க்காரணம்

ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது இலக்கியம் என்ற பெயர் ஏற்பட்டது.

2.2.2 இலக்கணம்

பல்வேறு இலக்கிய வகைகளுக்கு உரிய இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்கள் தூது இலக்கியத்தின் இலக்கணத்தையும் கூறுகின்றன. நவநீதப் பாட்டியல், பிரபந்த மரபியல், இலக்கண விளக்கம், முத்து வீரியம், சிதம்பரப் பாட்டியல், இலக்கணச் சுருக்கம் முதலிய பாட்டியல் நூல்களில் தூது இலக்கிய வகையின் இலக்கணத்தைக் காணமுடிகின்றது. பாட்டியல் நூல்கள் கூறும் வகைப்படி தூது இலக்கியம் பின்வருமாறு அமையும்.

1)
காதல் துயரம் காரணமாக ஓர் ஆண் அல்லது பெண், தான் காதல் கொண்ட பெண் அல்லது ஆணுக்குத் தூது அனுப்புவதாக அமைவது.
2)
உயர்திணையைப்போல் ஓர் அஃறிணைப் பொருளைத் தூது சென்று வருமாறு வேண்டுவது.
3)
தூது பெறுவோரிடம் சென்று மாலை வாங்கி வருமாறு தூது அனுப்புவோர், தூது செல்லும் பொருளிடம் வேண்டுவது.

கிடைக்கப் பெறும் தூது நூல்களின் மூலம் கிடைக்கும் விளக்கம்

இப்போது கிடைக்கப் பெறும் தூது நூல்களைப் பார்க்கும் போது காதல் காரணமாக மட்டும் அன்றி, வேறு பல காரணங்களுக்காகவும் தூது அனுப்புவதாக அமைவதை அறிய முடிகின்றது.

2.2.3 தோற்றமும் வளர்ச்சியும்

எல்லா இலக்கிய வகைகளையும் போலவே தூது இலக்கியமும் இலக்கணம், இலக்கியம் ஆகிய நூல்களில் காணப்படும் கருக்களிலிருந்து வளர்ச்சி அடைந்து, தனி இலக்கிய வகையாகத் தோன்றியுள்ளது. இவ்வகையில், தூது இலக்கிய வகையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் சிறிது காணலாம்.

தொல்காப்பியத்தில்

தொல்காப்பியர் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே பிரிவு நிகழ்வதற்குரிய காரணங்கள் கூறுகின்றார்.

கல்வி கற்கும் பொருட்டுச் செல்லுதல், மன்னனின் பகைவர்கள் மேல் போர்தொடுத்துச் செல்லுதல், தூது செல்லுதல் ஆகிய காரணங்களுக்காகத் தலைவன் செல்வான். அப்போது தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே பிரிவு ஏற்படும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார். இந்த இடத்தில் தூது செல்லுதல் பற்றிய குறிப்பு உள்ளது.

தூதாகச் செல்வதற்கு உரியவர்களைத் தொல்காப்பியர் வாயில்கள் என்று குறிப்பிடுகிறார்.

இலக்கியங்களில்

இலக்கியங்களிலும் தூது பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களில், அகப்பொருள் நிலையிலும் புறப்பொருள் நிலையிலும் தூதுச் செய்திகள் அமைவதைக் காணலாம்.

தூது வந்தன்றே தோழி (கலித்தொகை - 32 : 18)
(வந்தன்றே
= வந்தது)

என வரும் அடியை அகப்பொருள் தூதுக்குச் சான்றாகக் கூறலாம்.

அதியமான் என்ற மன்னனுக்காக ஒளவையார் என்ற புலவர் தொண்டைமான் என்ற அரசனிடம், போர் மேற்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்துவதற்காகத் தூது சென்றதாகப் புறநானூற்றுப் பாடல் (95) ஒன்று உள்ளது. இதைப் புறப்பொருள் சார்பான தூதுக்குச் சான்றாகக் கூறலாம்.

திருவள்ளுவர் திருக்குறளில் தூது என்ற ஒரு தனி அதிகாரமே அமைத்துள்ளார். இப்பகுதியில் தூது செல்பவர்களின் பண்புகள், தூது செல்பவர்களின் இலக்கணம், தூது சொல்லும் முறை முதலியவற்றைக் கூறக் காணலாம்.

பக்தி இலக்கியம் ஆகிய திருமுறைகளிலும், நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திலும், தலைவனாகிய இறைவனிடம் அன்பு கொண்ட தலைவி தூது அனுப்புவதாய் அமைந்த பாடல்கள் உள்ளன.

காப்பியங்களாகிய கம்பராமாயணம், சீவக சிந்தாமணி ஆகியவற்றிலும் தூதுச் செய்திகள் காணப்படுகின்றன. கம்பராமாயணத்தில் அனுமன் தூது காணப்படுகிறது. சீவகசிந்தாமணியில் சீவகனிடம் குணமாலை கிளியைத் தூது அனுப்பும் செய்தி இடம் பெறுகின்றது.

இவ்வாறு, இலக்கணத்திலும் இலக்கியங்களிலும் இடம்பெறும் கருக்களை அடிப்படையாகக் கொண்டு தூது என்ற தனியான ஓர் இலக்கியம் தோன்றியது எனலாம்.

முதல் தூது நூல்

தூது இலக்கிய வகையின் முதல் நூல் நெஞ்சுவிடு தூது என்ற நூல் ஆகும். இதனை இயற்றியவர் உமாபதி சிவாச்சாரியர் ஆவார். இதன் காலம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டு. தமது ஞானாசாரியரிடம் சென்று தமது குறைகளை எடுத்துக் கூறுமாறு, உமாபதி சிவாச்சாரியர் தமது நெஞ்சைத் தூது விடுக்கிறார். இந்நூலைத் தொடர்ந்து பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இப்போது முந்நூற்றுக்கும் மேற்பட்ட தூது நூல்கள் உள்ளன.

2.2.4 அமைப்பும் செய்திகளும்

தமிழில் காணப்படும் தூது நூல்களை அடிப்படையாகக் கொண்டு தூது இலக்கிய வகையின் அமைப்பையும், அதில் இடம்பெறும் செய்திகளையும் சுருக்கமாகக் காணலாம்.

பெயர் பெறும் முறை

எல்லாத் தூது நூல்களும் பொதுவாகத் தூது என்ற சொல்லை இறுதியில் பெற்றுள்ளன. சான்றாக நெஞ்சுவிடு தூது என்ற நூலைக் கூறலாம். ஆனால் சோம சுந்தர பாரதியார் இயற்றிய தூது நூல் மட்டும் மாரிவாயில் என்ற பெயரைப் பெற்றுள்ளது. மாரி என்றால் மேகம் என்றும் வாயில் என்றால் தூது என்றும் பொருள்படும். மேகவிடு தூது என்பது இதன் பொருள் ஆகும்.

தூது நூல்கள் பெயர் பெறும் நிலையில் சில முறைகள் உள்ளன.

1)
தூது அனுப்பும் பொருளின் பெயரால் பெயர் பெறுகின்றன. சான்றாக, மான்விடு தூது என்ற நூலைக் கூறலாம். இதில் தூது செல்வது மான் ஆகும்.
2)
சில நூல்கள் தூது பெறும் தலைவன் பெயரையும், தூது செல்லும் பொருளின் பெயரையும் கொண்டு அமைகின்றன. சான்றாக, மதுரை சொக்கநாதர் தமிழ்விடு தூது என்ற நூலைக் கூறலாம். இதில் தூது பெறுவோர் இறைவனாகிய சொக்கநாதர், தூது செல்வது தமிழ் ஆகும்.

இவ்வாறு, தூது நூல்கள் பெயர் பெறும் முறைகளைக் காணலாம்.

தூது நூல் வகைகள்

தூது அனுப்புவோர், தூது பெறுவோர் ஆகிய அடிப்படையில் தூது நூல்களை மூன்று வகைகளாகப் பாகுபடுத்தலாம்.

1) ஆடவர் ஆடவர்க்குத் தூது அனுப்பும் நூல்கள்
2) ஆடவர் பெண்களுக்குத் தூது அனுப்பும் நூல்கள்
3) பெண்கள் ஆடவர்க்குத் தூது அனுப்பும் நூல்கள்

என்று வகைப்படுத்தலாம்.

தலைவன் பெருமைகள் கூறுதல்

தூது நூல்களில் தூது பெறும் தலைவன் பெருமைகளை விளக்கிக் கூறும் பகுதி இடம் பெறுகின்றது. இப்பகுதியில் தலைவனின் தசாங்கங்கள் (பத்து உறுப்புகள்), தலைவனின் உறுப்புகளின் சிறப்புகள், தலைவன் இன்னின்னார்க்கு இன்னின்ன உறவுடையவன் என்று கூறும் உறவு முறைகள் போன்ற பல்வேறு பெருமைகள் விளக்கிக் கூறப்படும்.

தூது அனுப்பும் தலைவியின் நிலை கூறுதல்

பெண் ஆணுக்குத் தூது அனுப்பும் நூல்களில் தலைவியின் நிலை விளக்கிக் கூறப்படும். தலைவன் உலா வருகின்றான். அதைத் தலைவி காண்கின்றாள். தலைவி தலைவன் அழகைக் கண்டு மயங்கிக் காதல் கொள்கின்றாள். அப்போது தலைவனின் உலா தலைவியைக் கடந்து சென்று விடுகின்றது. தலைவனிடம் காதல் கொண்ட தலைவி மயங்கி விழுகின்றாள். இதைக் கண்ட அவள் தோழியர் தலைவியின் மயக்கத்தை நீக்க முயலுகின்றனர். மயக்கம் நீங்கிய தலைவி தலைவனிடம் கொண்ட காதலால் வருந்துகின்றாள். அப்போது தூதுவிடும் பொருளைக் காணுகின்றாள். அதை அழைத்துத் தன் நிலையைக் கூறுகின்றாள். தலைவனிடம் சென்று கூற வேண்டிய செய்திகளைக் கூறித் தூது சென்று வருமாறு வேண்டுகின்றாள். இவ்வாறு, தூது அனுப்பும் தலைவி பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.

தூதுப் பொருளின் பெருமைகளைக் கூறுதல்

தூது அனுப்புவோன் தூது செல்லும் பொருளை அழைத்து இன்னாரிடம் எனக்காகத் தூது சென்று வரவேண்டும் என வேண்டுகின்றான். அப்போது, தனக்காகத் தூது செல்லும் பொருளின் பெருமைகளை விளக்கிக் கூறும் பகுதி தூது நூல்களில் இடம்பெறக் காணலாம்.

இப்பகுதியில் இதற்கு முன்னால் யாருக்காக யார் தூது சென்றுள்ளார், தூது அனுப்புவதற்கு ஏற்ற பொருள்கள் யாவை, அவற்றை ஏன் தான் தூது அனுப்பவில்லை, தான் தேர்ந்தெடுத்த பொருளின் பெருமைகள் யாவை என்பன விளக்கப்படும்.

தூதுப்பொருளிடம் அறிவுரைகள் கூறுதல்

தூது அனுப்புவோர் தூது பெறுவோரிடம் தூது சொல்வதற்காகச் செல்லும் போது, எவ்வாறு செயல்படவேண்டும் என்று அறிவுரை கூறும் பகுதியும் இடம்பெறும். தூதுப் பொருள் செய்ய வேண்டுவன யாவை, செய்யக் கூடாதவை யாவை, தூது பெறுவோரைக் காண்பதற்கு ஏற்ற சமயம் யாது, தூது பெறுவோரைக் காண்பதற்குப் பொருந்தாத சமயம் யாது, தூது பெறுவோரின் அடையாளங்கள் யாவை, அவரிடம் எவ்வாறு கூற வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளைத் தூது அனுப்புவோர் கூறக் காணலாம்.

தூது வேண்டுதல்

தூது நூலின் அமைப்பில் கடைசியாகக் காணப்படும் பகுதி இது ஆகும். தூது அனுப்புவோர் தூது பெறுவோரிடம் சென்று இதை வாங்கி வர வேண்டும் என்று கூறுவதாக அமையும் பகுதி இது. தூது பெறுவோரிடம் சென்று தூதுப் பொருள் தம் துன்ப நிலைகளை அல்லது தன் செய்திகளைக் கூறிவிட்டு, மாலை வாங்கி வர வேண்டும். அல்லது தூது சொல்லி வர வேண்டும் எனத் தூது அனுப்புவோர் வேண்டுவதாக இப்பகுதி அமையும்.

இவ்வாறு, தூது இலக்கிய வகையின் அமைப்பும் பொருளும் அமையக் காணலாம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.

குறவஞ்சி என்ற பெயர் அந்த இலக்கியத்திற்கு ஏற்படக் காரணம் யாது?

விடை
2.

பாட்டுடைத் தலைவன் பெயரால் பெயர்பெறும் குறவஞ்சி நூல் ஒன்றைக் குறிப்பிடுக.

விடை
3.

தலைவி தலைவனிடம் யாரைத் தூது விடுகின்றாள்?

விடை
4.

தூது என்று இந்த இலக்கிய வகைக்குப் பெயர் ஏற்படக் காரணம் யாது?

விடை
5.

தமிழ் மொழியில் தோன்றிய முதல் தூது நூல் யாது?

விடை
6.

மாரி வாயில் என்ற தூது நூலை இயற்றியவர் யார்?

விடை
7.

தூது அனுப்பும் பொருளின் பெயரால் பெயர் பெறும் தூது நூல் ஒன்றைக் குறிப்பிடுக.

விடை

8.
தூது நூலின் அமைப்பில் கடைசியாக இடம் பெறும் பகுதி எது?
விடை