3.5 தொகுப்புரை

சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான உலா இலக்கியங்களுள் விக்கிரம சோழன் உலா சிறப்புப் பெற்று விளங்குகிறது. இந்நூல் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது. இவ்வுலா சோழர்களின் வரலாற்றை ஓரளவு எடுத்துக் கூறுகிறது. விக்கிரமசோழ மன்னனின் வீரத்தையும் கொடைச் சிறப்பையும் புலவரைப் புரக்கும் அம்மன்னன் பண்பையும் எடுத்துரைக்கின்றது. மன்னன் உலா வரும்போது அவன் அழகைக் கண்டு மயங்கும் ஏழுவகைப் பருவ மகளிர் நிலையைக் கற்பனையுடனும் அணி நயங்களுடனும் அழகுற எடுத்துரைக்கின்றார் ஒட்டக்கூத்தர். இந்நூலில் நாம் காணும் அணிநயங்களும் உவமைச்சிறப்புகளும் கற்பனைத் திறங்களும் ஒட்டக்கூத்தரின் புலமைத்திறத்தை நமக்கு எடுத்துரைக்கின்றன.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1) விக்கிரம சோழன் சிறப்பினை எழுதுக.
2) விக்கிரம சோழன் உலாவில் காணும் கவிதைச் சிறப்பை விளக்க ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
3) பட்டத்து யானை எவ்வாறு வர்ணிக்கப்படுகிறது?
4) விக்கிரமசோழனின் கோயிற்பணிகளைக் கூறுக.