3.2 சைவசித்தாந்த சாத்திரங்கள்

    சைவ சமயத்தின் தத்துவநூல் சைவ சித்தாந்தம் எனப்படும். தத்துவ நூல்கள் சாத்திரங்கள் எனப் பெயர் பெறும். சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு, சித்தாந்தம் தமிழர்களுக்கு  உரிய தொன்மையான தத்துவம் எனப் போற்றப்படுகிறது. திராவிடர் கண்ட பேருண்மை, திராவிடர்களுடைய அறிவாற்றலின் விளைவு என்றெல்லாம் டாக்டர் ஜி.யு.போப் இதனைப் பாராட்டிக் கூறியுள்ளார். கி.பி. 12ஆம் நூற்றாண்டில் முதலிரு நூல்களும், பதின்மூன்றாம் நூற்றாண்டில் நான்கும், பதினான்காம் நூற்றாண்டில் எட்டு நூல்களுமாக இவை தோன்றின.

    பதினான்கு சாத்திர நூல்களையும் நினைவூட்டும் வெண்பா ஒன்றுண்டு.

உந்தி களிறு உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம் - வந்தவருட்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்பம் முற்று

    திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறிவிளக்கம், சங்கற்ப நிராகரணம் என்பன அவை.

  • திருவுந்தியார்

    திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் (12ஆம் நூற்றாண்டு) 45 செய்யுட்களால் பாடியது. திருவாசகத்தில் உள்ள திருவுந்தியார் அமைப்பைக் கொண்ட நூல்.

  • திருக்களிற்றுப் படியார்

    திருக்கடவூர்     உய்யவந்த தேவநாயனாரால் (12-ஆம் நூற்றாண்டு)     அறுபத்து     மூன்று     நாயன்மார்களின் வரலாற்றடிப்படையில் விளக்கமாக எழுதப்பட்டது. திருக்குறள் மேற்கோளாக எடுத்தாளப்படுகிறது. இவ்விரு     நூல்களும் தமிழ்ப்போக்கு மிக்கவை என்றும் அனுபவ நூல்கள் என்றும் போற்றப்படும்.

  • சிவஞான போதம்

    12 சூத்திரம், 39 அதிகரணம், 81 எடுத்துக்காட்டு வெண்பா அடங்கியது. திருவெண்ணெய் நல்லூர் அச்சுதக் களப்பாளரின் மகன் மெய்கண்டார் இயற்றியது.

    பதினான்கு சாத்திரங்களிலும் இதுவே தலைமையானது. இதனையும் இதற்கு எழுதப்பட்ட சிவஞான மாபாடியம் என்னும் உரையையுமே இன்று சித்தாந்த உண்மை தேடுவார் முதன்மையாகக்  கற்கின்றனர்.

  • சிவஞான சித்தியார்

    மெய்கண்டாரின்     மாணவர் அருணந்தி சிவாசாரியார்   எழுதியது. சிவஞான போதத்தின் வழிநூலாக, மிக விரிவாக இது  எழுதப்பட்டது ‘சிவத்தின் மேல் தெய்வமில்லை, சிவஞான சித்திக்கு மேல் சாத்திரமில்லை’ என்பது பழமொழி. பரபக்கம், சுபக்கம் எனும் இரு பகுதிகளை உடையது இந்நூல்.

  • இருபா இருபஃது

    இதுவும் அருணந்தி சிவாசாரியார் எழுதியதே. அந்தாதித் தொடையுடன்     பத்து நேரிசை வெண்பாக்களும் பத்து நேரிசையாசிரியப் பாக்களுமாக மாறி மாறிப் பாடப்பட்டது. மாணவன் ஆசிரியரிடம் வினாக்களை எழுப்பி உண்மையறிவது போல் எழுதப்பட்டது.

  • உண்மை விளக்கம்

    ‘நமச்சிவாய’ என்பதன் தத்துவப் பொருளை விளக்குவது. மெய்கண்டாரின் மற்றொரு மாணவர் திருவதிகை மனவாசகங் கடந்தார் இதனை எழுதியுள்ளார்.

  • சிவப்பிரகாசம்

    அருணந்தி சிவாசாரியாரின் மாணவர் மறைஞான தேசிகர். அவர் மாணவராகிய கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் கி.பி.  14ஆம் நூற்றாண்டில் இயற்றியது. இது, சிவஞான போதம், சித்தியாரை அடியொற்றியது. இது முதல் எட்டு நூல்களும் இவ்வாசிரியரே எழுதியவை (1) சிவப்பிரகாசம் (2) குறள் வெண்பாக்களாலாகிய திருவருட்பயன் (3) ஆசிரியரை வினவுவது போற் பாடிய வினா வெண்பா (4) ஞான குருவைப் புகழ்வதும் கலிவெண்பாவால் ஆனதுமான போற்றிப் பஃறொடை (5)தில்லையில்     கொடியேற்றல்     பற்றிய கொடிக்கவி (6) திருவள்ளுவரைப் போற்றுவதும் குருவிடம் தூதனுப்புவதுமான நெஞ்சுவிடுதூது (7) தசகாரியம் பத்தையும் விளக்கும் ஆறு விருத்தப் பாக்களடங்கிய உண்மை நெறிவிளக்கம் (8) அகச்  சமயக் கருத்துகளை மறுக்கும் சங்கற்ப நிராகரணம் என்பன ஏனைய நூல்களாம்.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
அகப்பொருள் செய்திகளை அடிப்படையாகக்
கொண்டு எழும் இலக்கியம் யாது?
2.
இரவலர்களுக்கு வழிகாட்டும் சிற்றிலக்கியம் எது?
3.
அற்புதத் திருவந்தாதியைப் பாடியவர் யார்?
4.
பரணி இலக்கியம் யாரைக் குறித்துப் பாடுவதாகும்.
5.
பிள்ளைத் தமிழ் நூல்கள் இரண்டினைக் கூறுக.
6.
தமிழில் தோன்றிய முதல் கலம்பக நூல் யாது?
7.
நெல்லு வகையை எண்ணினாலும் எண்ணிவிடலாம்
பள்ளு வகையை எண்ண முடியாது? விளக்குக.
8.
சிவஞான போதத்தை எழுதியவர் யார்?
9.
கொற்றவன் குடி உமாபதி சிவாசாரியார் எழுதியுள்ள
நூல்கள் யாவை?
10.
அகச்சமய கருத்துகளை மறுக்கும் தத்துவ நூல்
எது?