5.2 பாரத மக்களின் இழி நிலை

பாரதியாரின் பத்துக்கட்டளைகளாகநாம் குறிப்பிடுவது பாரதியார் ஆங்காங்கே மானுடர்க்குக் கொடுத்தஅறிவுரைகள் தாம். இவை அவர் வாழ்ந்த காலச் சூழ்நிலை, மக்களின்நடத்தை, பண்பு நலன் அல்லது கேடு - இவற்றின் அடிப்படையில் தோன்றியவை.பாரதி காலத்து மக்கள் அடிமைகளாய், தமக்குள் ஆயிரம் பிரிவுகள்கொண்டவராய் வாழ்ந்தனர். பாரதியின் கட்டளைகளை முழுமையாகஅறிந்து உணர்வதற்கு, அவர் எப்படிப்பட்ட மக்களிடையே வாழ்ந்தார்என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம் ஆகிறது.

பாரதியார் தம் காலத்தில்- ஊமையராய், செவிடர்களாய்,குருடர்களாய், பாமரராய், விலங்குகள் போல் இழிவான வாழ்க்கைநடத்தி வந்த மனிதர்களைப் பல்வேறு பெயர்களால் சுட்டிக் காட்டியுள்ளார்.ஊக்கமும் உள்ள உறுதியும் இல்லாமல், உலகனைத்தும் இகழும்படியாக,நிலத்திற்குச் சுமையென வாழ்ந்து வந்த மக்களைப் பற்றி்அவர் தம்கவிதைகளில் பல இடங்களில் கடுமையாகச் சாடியுள்ளார்.

'வேடிக்கைமனிதர்'

இந்த உலகில்,

"தேடிச் சோறு நிதம் தின்று -பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்

வாடித் துன்ப (ம்) மிக உழன்று - பிறர்

வாடப் பல செயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப் பருவம் எய்தி - கொடுங்

கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் -"

பலரை'வேடிக்கை மனிதர்' என்ற தொடரால் சுட்டியுள்ளார் பாரதியார். பிறிதோர்இடத்தில் உண்டு, உறங்கி, இடர் செய்து, செத்திடுவோரைக் 'கலக மானிடப் பூச்சிகள்' எனக் குறிப்பிட்டள்ளார் அவர்.

'விந்தை மனிதர்'

விடுதலைக்கு மகளிர் எல்லோரும் வேட்கை கொண்டு வீறு பெற்றுவரும் இந்நாளில்,

"வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம்!"என்ற குறுகிய எண்ணம்கொண்டு இருப்போரை 'விந்தை மனிதர்' என்ற தொடரால் அழைத்துள்ளார் கவியரசர்.

'பித்த மனிதர்'

பாரதியாரின் பார்வையில்,

"செத்த பிறகு சிவலோகம்,வைகுந்தம்

சேர்ந்திடலாம் என்றே எண்ணியிருப்பார்"

(சங்கு: 1-2)

'பித்தமனிதரா'கப் பட்டனர்; அவர்சொல்லும் சாத்திரத்தைப் 'பேயுரை' என்று கடுமையாகச் சாடினார் கவியரசர்.

'நிலைகெட்ட மனிதர்'

பாரத நாட்டில் இன்று எதற்கெடுத்தாலும் அஞ்சி அஞ்சிச் சாவாரை - எப்போதும் கைகட்டி, யாரிடத்தும் பூனைகள் போல்ஏங்கி நடப்பாரை - ஒரு கோடிப் பிரிவினைகள் கொண்டு தமக்குள்ளே பெருஞ்சண்டையிடுவாரை - பொறியற்ற விலங்குகள் போல வாழ்வாரை- நெஞ்சு பொறுக்காமல் 'நிலை கெட்ட மனிதர்' என்று கடுமையாகச் சாடியுள்ளார் பாரதியார். (பாரத ஜனங்களின் தற்கால நிலைமை :1-56)

'வாய்ச்சொல்லில் வீரர்'

நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறனும் இன்றி, வஞ்சனை சொல்வாரை 'வாய்ச் சொல்லில் வீரர்' (ப.196) என்றும், அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்டாரை 'ஊமைச் சனங்கள்' என்றும் 'நடிப்புச் சுதேசிகள்' என்ற பாடலில் பழித்து உரைத்துள்ளார்.

இங்ஙனம் வெவ்வேறு அடைமொழிகளையும் தொடர்களையும் கையாண்டு தம் காலத்துப் பாரத மக்களின் நிலைமையைத் தோலுரித்துக்காட்டியுள்ளார் பாரதியார்.

தன்மதிப்பீடு : வினாக்கள்

1. பாரதியார் வாழ்க்கைக்குத் தரும் விளக்கம் யாது? [விடை]
2. 'பாப்பா பாட்டில் பாரதியார் வாழும் முறைமையாக அறிவுறுத்துவது யாது? [விடை]
3. சிவசக்தி தம்மை எப்படிப் படைத்திருப்பதாக பாரதியார் பாடுகிறார்? [விடை]
4. பாரதியார் சிவசக்தியிடம் என்ன வல்லமை தருமாறு வேண்டுகிறார்? [விடை]
5, பாரதியார் சிவசக்தியிடம் தமக்கு எத்தகைய உடல் வேண்டும் என்று கேட்கிறார்? [விடை]
6. பாரதியார் 'வேடிக்கை மனிதர்' என யாரைச் சுட்டுகிறார்? [விடை]
7. 'விந்தை மனிதர்' எனப் பாரதியார் குறிப்பிடுவது யாரை? [விடை]
8. 'செத்த பிறகு சிவலோகம், வைகுந்தம் சேர்ந்திடலாம்' என்றே எண்ணியிருப்பவரை பாரதியார் எங்ஙனம் சாடியுள்ளார்? [விடை]
9. பாரதியார்' வாய்ச்சொல்லில் வீரர்' என்று யாரைக் குறிப்பிடுகிறார்? [விடை]