2.2 நூலமைப்பு


    இந்நூலின்    உள்ளடக்கப்    பொருள்    எவ்வாறு
இயல்களாகப் பகுத்து அமைக்கப்பட்டுள்ளது என்பதை
இங்குக் காணலாம்.

2.2.1 இயல்களும் பாடல்களும்

    தஞ்சைவாணன் கோவையில் 3 இயல்கள், 33 பிரிவுகள், 425 பாடல்கள் உள்ளன. அவை,

    (1) களவியல் - 18 பிரிவுகள் - 280 பாடல்கள்
    (2) வரைவியல் - 8 பிரிவுகள் - 86 பாடல்கள்
    (3) கற்பியல் - 7 பிரிவுகள் - 59 பாடல்கள்
ஆகியன.

    களவியல்    என்பது    தலைவன்    தலைவியின்
திருமணத்துக்கு முன் உள்ள காதல் வாழ்க்கை பற்றிய இயல்.
தலைவியைத்    தலைவன்    முதன்முதல்    பார்ப்பது
தொடங்கிக் காதலித்துப், பின்    திருமணத்திற்காக அவன்
பொருள் தேடிப் பிரிந்து செல்லுதல் வரை உள்ளவை
களவியலில் கூறப்பட்டுள்ளன.

    வரைவு    என்றால் திருமணம் என்று பொருள்.
திருமணத்திற்காகத் தலைவனும்    தலைவியும்    முயல்வது
தொடங்கித் திருமணம் செய்து கொள்ளுதல் வரை உள்ளவை
வரைவியலில் கூறப்பட்டுள்ளன.

திருமணம் செய்து கொள்ளுதல்

    கற்பியல் என்பது திருமணத்திற்குப் பின் உள்ள குடும்ப
வாழ்க்கையைப் பற்றிய இயல் ஆகும்.
  • பாடுபொருள்
    ஒரு நூலில் பாடப்படும் பொருள் அல்லது கருத்து
பாடுபொருள் எனப்படும். தஞ்சைவாணன்    கோவையின்
பாடுபொருள் அகப்பொருள் ஆகும். இதில் தலைவன்
தலைவியின் அகவாழ்க்கை    நிகழ்ச்சிகள் வரிசையாகப்
பாடப்பட்டு உள்ளன. எனவே தான் இந்நூலை அகப்பொருள்
கோவைநூல் என்று சொல்லுகிறோம்.

  • பாவகை
    இந்நூலில் உள்ள பாடல்கள் அனைத்தும் கட்டளைக்
கலித்துறை என்ற பா இனத்தால் அமைந்துள்ளன.

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1) கோவை என்றால் என்ன?
2) அகப்பொருள் கோவை என்றால் என்ன?
3) தஞ்சைவாணன் கோவை யாரால் யாரைப்
பற்றிப் பாடப்பட்டது?
4) இந்த இலக்கியத்துக்குரிய அடிப்படை
நூல் எது?
5) இந்த நூலில் எத்தனை இயல்கள் உள்ளன?
அவை யாவை?
6) இதில் பயின்று வரும் பா இனம் யாது?
7) தஞ்சைவாணன் ஆட்சி செய்த பகுதி எது?