- 24 -

தேவியின் கோயிலை அடைதல்

18.  சண்ட கோபி தகவிலி1 தத்துவங்
  கொண்ட கேள்வியுங் கூரறி வும்மிலாத்
  தொண்டர் கொண்டு தொழுந்துருத் தேவதை
  கண்ட மாரி தனதிட மெய்தினான்.

(இ-ள்,) சண்ட கோபி-கடுங்கோபமுடையவளும், தகவுஇலி-(வணங்குதற்குரிய) தகுதியில்லாதவளும், தத்துவம்-எழுவகைத் தத்துவங்களை, கொண்ட - உட்கொண்ட, கேள்வியும்-(நூலின்) கேள்வியறிவும், கூர் அறிவும்-இயற்கை நுண்ணறிவும், இலா-பெற்றிலாத, தொண்டர்-பக்தர்கள், கொண்டு-மேற்கொண்டு, தொழும்-வழிபடுகின்ற, துருத்தேவதை - தீயதேவதையுமாகிய, சண்டமாரிதனது இடம் - சண்டமாரியின் உருவச்சிலையுள்ள கோயிலை, எய்தினான்-(அரசன் சென்று) அடைந்தான். (எ-று.)

அரசன் துர்த்தேவதை கோயிலை எய்தினானென்க.

சண்டகோபியும் தகவுஇலியும் தொண்டர் தொழுந்துர்த்தேவதையுமாகிய சண்டமாரி யென்க.  தத்துவம் ஏழு. அவை-உயிர், உயிரில்லாதது, ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு என்பன.  பொருள்களின் உண்மைத் தன்மையும் ஒன்றன்பரிணதியும் தத்துவம் என்று கூறப்படும். பொருள்கள் மலரின் மணமும்,  மணியின் ஒளியும் போலப் பிரிக்கவியலாத இயற்கைக்குணங்களையும் அவற்றோடு கூடி நிகழும் நிகழ்ச்சிகளையும் உடையனவாகலின், அவை தத்துவங்கள் எனப்பட்டன.  இதனை, ‘வஸ்துக்களின் யாதாத்ம்யம் தத்துவம், ‘தஸ்யபாவம் தத்தவம்‘ என்று பதார்த்தசாரம் கூறுவதனா லறியலாகும்.

1. உயிர்;- அறிவு காட்சி முதலிய குணங்களையுடையது.

 

1 பாடம் தகவில.