- 123 -

 

இரண்டாவது சருக்கம்

உஞ்சயினியின் சிறப்பு

73  வளவயல் வாரியின் மலிந்த பல்பதி
  அளவறு சனபத மவந்தி யாமதின்
  விளைபய னமரரும் விரும்பு நீர்மைய
  துளதொரு  நகரதுஞ் சயினி யென்பவே.

    (இ-ள்.) வாரியின் வளம்-நீ்ர் வளத்தால், வயல்  வளம்மலிந்த-வயல்வளம் முதலியன நிறைந்த, பல் பதி-பல நகரங்களை யுடைய, சனபதம் - தேசமானது, அவந்தியாம்-அவந்தி (தேசம்) என்பதாம், அதன் அளவறு விளை பயன்-அந்நாட்டினுள் அளவின்றித் தோன்றும் போகப் பொருள்களை யுடையதும்,  அமரரும் விரும்பும் நீர்மை  யது-தேவரும் விரும்பும் தன்மை யுடையது மாகிய, ஒருநகர்  உளது- தலைநகர் ஒன்று உண்டு, அது உஞ்சயினி என்ப - அதனை உஞ்சயினி என்று (அறிஞர்) கூறுவர்.  (எ-று.)

அவந்தி நாட்டின்கண் உஞ்சயினி யென்னும் நகரம் சிறந்து விளங்கிற் றென்க.

வளம், என்பது இரண்டிடத்தும் கூட்டப்பட்டது. வாரி-நீர்; வடசொல், வாரிவளம';  என்றார் தேவரும். இனி, வாரி-வருவாய் எனினுமமையும்.  சனபதம்-தேசம். வடசொல்.  இதனை ‘நீவ்ரஜ் ஜநபதோ தேச விஷயௌது உபவர்த்தனம';  என்பதறிக (அமரம்)  ஜநபதம்-ஜநங்களுடைய இடம்;  ஜநங்கள் நடந்துக் கொண்டிருப்பது என்பது பொருள்.  ‘அமரரும் விரும்பும்  நீர்மையது‘ எனவே அமராவதியைக் காட்டிலும் சிறந்த  தென்பது அறியப்படும். அமரரும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பு. கூ, அசை. இனி, அமரரும் வி்ரும்பும் விளைபயன் எனினுமாம். ‘என்ப'; என்பதனை அசையாக்கிக் கூறினு மமையும்.

'அசோகன் சிறப்பு

74. கந்தடு களிமத யானை மன்னவன்
  இந்திர னெனுந்திற லசோக னென்றுளன்
  சந்திர மதியெனு மடந்தை தன்னுடன்
  அந்தமி லுவகையி னமர்ந்து வைகுநாள்

(இ-ள்.) மதக்களி - மதக்களிப்பினால், கந்து  அடுயானை - கட்டுத் தறியையும் முறிக்கும் (ஆற்றலுடைய) யானைகளை யுடைய, மன்னவன்-வேந்தன், இந்திரன் எனுந்திறல்-(எல்லா வல்லமைகளிலும்)  தேவேந்திரனே என்று சொல்லத்தக்க வல்லமை படைத்த, அசோகன் என்று உளன் - அசோகன் என்று ஒருவன் இருந்தான் (அவன்), சந்திரமதி எனும் மடந்தை தன்னுடன் -(இந்திராணியோடொத்த) சந்திரமதி யென்னும் பெண்ணரசியோடு, அந்தம் இல் உவகையில்-முடிவில்லாத இன்ப (சாகர)த்துள், அமர்ந்து வைகும் நாள்-விரும்பி வாழும் நாளில்; (எ-று.)

அந்நாட்டிற்கு வேந்தனும் இந்திரனை நிகர்த்த வனுமான அசோகன் கோப்பெருந் தேவியாகிய  சந்திரமதியுடன் இன்புற்றுவரும் நாளில் என்பதாம்