- 141 -

கமழ் அமளிதேம்ப - தேன்மணக்கும் படுக்கையும் அசைந்தொலிக்க, செறிந்தனர் - புணர்ந்து,  திளைத்து விள்ளார்-காம இன்பத்தில்  திளைத்து நீங்காதவர்களாயினர். (எ-று.)

மன்மதபாணங்களா வடிபட்ட இருவரும் ஒன்றுபட்டு அனுபவித்தனரென்க.

ஒன்றுபட்டமையையே,  ‘ஒருவருள்புக்கு  இருவரும் ஒருவராகி‘ என்றார்.  இதனை, ‘இருவரும் இறைவனுள்ளத் தொருவரா யினியாரானார்‘ (சூளா - 64)  என்று கூறியதறிக.  திளைத்தல் - அனுபவித்தல்; அழுந்தலுமாம்.  விள்ளல்  - நீங்குதல்.                  (18)

இதுவுமது.

91. மடங்கனிந் தினிய நல்லாள் வனமுலைப் போக மெல்லாம
  அடங்கல னயர்ந்து தேன்வா யமிர்தமும் பருகி யம்பொற்
  படங்கடந் தகன்ற வல்குற் பாவையே புணைய தாக
  விடங்கழித் தொழிவி லின்பக் கடலினுண் மூழ்கி னானே.

(இ-ள்.) (யசோதரன்), மடம் கனிந்து  இனிய நல்லாள்-இளமை நிரம்பப்பெற்று  இனியளான அமிர்தமதியின்,  வனமுலைப்போகம் எல்லாம்-அழகிய  முலைப்போக மனைத்தையும், அடங்கலன் அயர்ந்து - தணியாத வேட்கையோடு துய்த்து, தேன்வாய்  அமிர்தமும்  பருகி-இனிய அதரச்சுவையையும் பருகி,  அம்பொற் படம் கடந்து அகன்ற அல்குல்-மிக அழகிய பாம்பின் படத்தையும் வென்று பரந்த அல்குலினையுடைய, பாவையே-அமிர்தமதியே,  புணையதாக-தெப்பமாக,  இன்பக்கடலினுள்-சிற்றின்பக் கடலினுள், இடங்கழித்து-வரம்பு இன்றி, ஒழிவு இல்-இடைவிடாது,  மூழ்கினான்-அழுந்தினான். (எ-று.)

நல்லாள் போகத்தை ஒழிவின்றி நுகர்ந்தும்,  திருப்தி யின்றி மீட்டும் மீட்டும் நுகர்வதற்கு  விரும்பினா னென்க.