- 289 -

வர்களும், எத்தகைய தூயநினைவும் தூயசெயலும்   நிகழ்த்தினோராயினும் அவர்கள் மறுமையில் கொடிய  நாகங்களிலெய்தி மிக்க துன்பங்களைத் துய்ப்பரென்று  ஆகமத்துக்கூறப்படுதலின், அசாத வேதநீயத்திற்குக் காரணமாகியஅந்தத் தற்கொலையை, ‘பிழை பெரிது‘  என்றார்.  துக்கசோக தாப ஆக்ரந்தன வத பரிவேதனான் யாத்ம பர உபயஸ்தானானி அஸத்வேத்யஸ்ய‘ என்னும் தத்த்வார்த்தசூத்திரத்தின் உரையானும் இதனை அறியலாகும்.  (56)

276.  மன்னவன் மனத்ததை விரித்தருள் வளர்க்குஞ்
  சொன்னவில் சுதத்தமுனி தொன்மல ரடிக்கட்
  சென்னிமுடி துன்னுமலர் சென்றுற வணங்கிப்
  பன்னியரு ளிறைவவெமர் பவமுழுது மென்றான்.

  (இ-ள்.) மன்னவன் - யசோமதி, மனத்தை விரித்து -தன் உள்ளத்தில் கருதிய  எண்ணத்தை அறிந்து  விரித்துரைத்து,  அருள் வளர்க்கும் சொல் நவில் - கிருபையை வளர்க்குஞ் சொல்லைக் கூறிய, சுதத்தமுனி - சுதத்த முனிவரரின், தொன் மலர் அடிக்கண் - வணங்குவதற்குரியன வாகியமலர்போன்ற பாதங்களில்,  சென்னி முடி துன்னும் மலர்சென்று உற வணங்கி - (தன்)  சென்னியிலணிந்த முடியில் செறிந்த மலர்கள் வீழும்படி வணங்கி.  இறைவ - தவ வேந்தரே, எமர் பவம் முழுதும் பன்னி அருள் - எம் முன்னோரெய்திய பிறப்பனைத்தையும் விளங்க உரைத்தருள்க, என்றான் - என்று விநயமுடன் கேட்டான்.  (எ-று.)

மன்னன், முனிவனை  வணங்கித் தம் முன்னோர் எய்திய பிறவிகளை வினவினானென்க.  

அரசன் பல இன்னல் புரியக் கருதியது அறிந்தும் வெகுளாது அவனுக்கு அருள்மொழி புகன்றமையின்,‘ அருள் வளர்க்கும் சொல் நவில் சுதத்தமுனி‘  என்றார். தொன்மை - பழமை:  ஈண்டு  உரிமை. துன்னுதல் - சேர்தல். உற -பொருந்த. பன்னுதல் - ஆராய்ந்து பேசுதல். முனிவர் சிறந்த அவதி ஞானத்தால் தன் மனத்தில் உள்ளதை உணர்ந்து கூறியதனால் தன் முன்னோரெய்திய  பிறவிகளையும் அரசன் கேட்கலாயினான்.   (57)