- 303 -
291.  மன்னன் மயிலாய்மயிரி முள்ளெயின மீனாய்
  பின்னிருமு றைத்தகரு மாகியவ னேகி
  மன்னுசிறை வாரணம தாகிவத மருவி
  மன்னவநின் மகனபய னாகிவளர் கின்றான்.

(இ-ள்.) மன்னவ- (யசோமதி) வேந்தே, மன்னன் - யசோதர வரசன், மயில் ஆய் - ஆண்மயிலாயும், முள்மயிரி எயினம் - முடபோன்ற மயிரையுடையதாகிய பன்றி (முள்ளம்பன்றி) யாயும்,  மீன் ஆய் - மீனாயும், பின் இருமுறை தகரும்ஆகி அவன் - பின்னர் இரண்டு தடவை ஆடாயும் பிறந்தவன்,  ஏகி - (அதனின்றும்) போய், மன்னு சிறைவாரணமது ஆகி - பொருந்திய சிறகுகளையுடைய கோழியாகி (அப்பிறவியில்), வதம் மருவி - (தன் சக்திக்குத்தக்கவாறு) விரதங்களை ஏற்று, (அதனால் இப்பொழுது), நின் மகன் அபயன் ஆகி - உன் மகனான அபயருசியாகி, வளர்கின்றான் - --, (எ-று.)

யசோதரன், மயில் முதலிய பிறவிகளை யெய்தி ஈண்டு அபயருசி யாயினா னென்க.

வாரணம் அது, ‘அது‘பகுதிப் பொருள் விகுதி.  மயிரி-மயிரையுடையது: மயிரிமுள் எயினம் என்றது முள்ளம் பன்றியை.

292.  சந்திரமுன் மதிஞமலி நாகமொ டிடங்கர்
  வந்துமறி  மயிடமுடன் வாரணமு மாகி
  முந்தைவினை நெகிழமுனி மொழியும்வத மருவி
  வந்துன்மக ளபயமதி யாகிவளர் கின்றாள்.

(இ-ள்.) சந்திரமுன்மதி - சந்திரமதியும். ஞமலி நாகமொடு இடங்கர் வந்து - நாயும் கரும்பாம்பும் முதலையுமாகப் பிறந்து, (பின்), மறி - பெண் ஆடாயும்,  மயிடம் உடன் - எருமையாயும் பிறந்ததனோடு,  வாரணம் உம் ஆகி-கோழியுமாகி,  முந்தை வினை நெகிழ - பழைய தீவினைகள்தளர,  முனி மொழியும் வதம் மருவி - அகம்பன முனிவர் மொழிந்த விரதங்களை ஏற்று,  வந்து - (அந்நல்வினையால்) வந்து, உன்மகள் அபயமதி ஆகி - உன் மகளாகிய அபயமதியாகப் பிறந்து, வளர்கின்றாள்- --. (எ-று.)