- 315 -

மெய்யாகவே, சினவரன் சரணம் மூழ்கி - இறைவன் திருவடிகளில் பணிந்து, செறிதவம் படர்தும் என்றார் - (அவரருளிய) மிக்க தவத்தின் (வழியில்) செல்லுவோம் என்றார்.  (எ-று.)

இளைஞர், முனிவரை வணங்கி,  தீக்ஷை அருளுமாறு வேண்டினரென்க.

தன, வினையின என்பவற்றில், ‘அ‘ ஆறனுருபு.‘ இளைஞர் சென்ற சமயத்தில் முனிவர் அறவுரை கூறிக்கொண்டிருந்தாரென்க.              (88)

308.  ஆற்றல தமையப் பெற்றா லருந்தவ மமர்ந்து செய்மின
  சாற்றிய வகையின் மேன்மேல் சய்யமா சய்யமத்தின்
  ஏற்றவந் நிலைமை தன்னை யிதுபொழு துய்மி னென்றான்
  ஆற்றலுக் கேற்ற வாற்றா லவ்வழி யொழுகு கின்றார்.

   (இ-ள்.) (சுதத்தாசாரியர் இளைஞரை நோக்கி), ஆற்றல் அமையப் பெற்றால் - (நுமக்குத் தவம் ஏற்றுச் செய்தற்குத்தக்க) வல்லமை அமையப்பெற்ற போழ்து, அருந்தவம் - அரிய தவத்தை, அமர்ந்து செய்மின் - விரும்பிச் செய்யுங்கள்: சாற்றியவகையில் - (உலக நோன்பிகளுக்குக்) கூறியவகையில், மேல் மேல் - ஒன்றன்மேல் ஒன்றாகவுள்ள, சய்யமா சய்யமத்தின் - தேச சம்யத குணஸ்தானத்தில், ஏற்ற - (உங்கள் சக்திக்கு) ஏற்ற, அந்நிலைமை தன்னை - உத்திக்ஷ்ட பிண்ட விரதம் என்னும் அப் பதினோராம் நிலையினை, இது பொழுது உய்மின் - இப்பொழுது (ஏற்று) உய்யுங்கள் என்றான் - என்று அருள் செய்தார்;  ஆற்றலுக்கு ஏற்ற ஆற்றால் - (இளைஞரும் தங்கள்) சக்திக்குத் தக்கவாறு, அவ்வழி ஒழுகுகின்றார் - அப்பதினொன்றாம் நிலையினதாகிய க்ஷுல்லக வேடத்தினை ஏற்று ஒழுகுவாராயினர்.  (எ-று.)

தேச சம்யத குணஸ்தானத்தின் வகைகளில் மேல் நிலையாகிய பதினோராம் நிலையினை இப்பொழுது ஏற்று ஒழுகுங்கள் என்று கட்டளையிட அவ்விருவரும் அவ்வாறே மேற்கொண்டனரென்க.

‘ஸக்திஸ்த்யாக தபஸி‘ என்பது (நீல. 143இன் உரை) விதியாகலின், ‘ஆற்ற தமையப் பெற்றால் அருந்தவம் அமர்ந்து செய்மின்‘ என்றார்.