பக்கம் எண் :
 
200தண்டியலங்காரம்

இடையிட்டு வந்த பாடக மடக்கு

எ - டு :

'கலைநி லாவரு மாலைம ணங்கொள்வான்
மலைய மாருத மாறல மாதர்கண்
கலைநி லாவரு மாலைம ணங்கொள்வான்
மலைய மாருத மாறல மாதர்கண்'

 இ - ள்: கலை நிலா - கலை(ஆடை) நில்லாத, அருமாலை - அரிய அந்திப்பொழுதில், மணங் கொள்வான் - புணர்ச்சியை வேண்டி, மாதர் கண் - காதலோடு கூடிய கண், மலைய மாருதம் - மிகவும் அழுகை, மாறல - நீங்காது; கலை நிலா வரும் - மதியின் கண் உண்டாகிய நிலவு எழும், மாலை - தொடையலின், மணங் கொள்வான் - வாசங் கொள்ள வேண்டி, மலைய மாருதம் - தென்றலானது, மாறல - நீங்காது, மாதர்கண் - இவளுழை எ - று.

(வி - ரை)இப்பாடற்கண் முதலடி மூன்றாமடியாகவும், இரண்டாமடி நான்காமடியாகவும் மடங்கி வந்தமையின் இடையிட்டு வந்த பாடக மடக்காயிற்று.

இரண்டாம் அடியிலுள்ள மலையமாருதம் என்ற சொல் தென்றலைக் குறிக்குமேனும், ஈண்டு ஆகுபெயராய் அதனால் விளைந்த அழுகையைக் குறித்தது.

இதுவுமது

எ - டு :

'ஓத நின்றுல வாவரும் வேலைவாய்
மாத ரங்க மலைக்கு நிகரவே
ஓத நின்றுல வாவரு வேலைவாய்
மாத ரங்க மலைக்கு நிகரவே'

 இ - ள் : நின்று ஓத - நின்று சொல்ல, உலவா - முடிவில்லாத, அரும் வேலைவாய் - அரிய காலத்தின்கண், மாதர் - இவளுடைய, அங்கம் - அவயவங்களை, அலைக்கும் நிகரவே - அழிக்குமாறு பட்டன, ஓதம் நின்று - நீர் நிலைபெற்று, உலவா வரு - உலவி வருகின்ற, வேலைவாய் - கடலில், மா தரங்கம் - பெரிய திரைகள், மலைக்கு நிகரவே மலைக்கு ஒப்பாக இருக்கும் எ - று.

(வி - ரை)இதன்கண் முதலடி மூன்றாமடியாகவும், இரண்டாமடி நான்காமடியாகவும் மடங்கி வந்தமையின், இது இடையிட்டு வந்த மடக்காயிற்று.

இனி, அந்தாதி மடக்கு வருமாறு :-

அந்தாதியாவது, ஓரடியின் அல்லது செய்யுளின் ஈற்றில் வருஞ்சொல், அடுத்த அடியின் அல்லது அடுத்த செய்யுளின் முதலில் வருவது. அந்தம் ஆதி என்பன அந்தாதி என்று ஆயது. அந்தம் - ஈறு; ஆதி - முதல்; அந்தமே முதலில் வருவது என்பது இதன் பொருள்.

அந்தாதி மடக்கு

எ - டு : 

'மாலை யாக1வெய் தனங்கவேள் பயில்தரு மாலை
மாலை வேட்டவர் மனங்கொலோ அவன் துழாய் மாலை
மாலை யோவுடைத் ததுநினைந் தெழுதரு மாலை
மாலை யாவுடை யவரைவந் திடர்செயு மாலை'

1. 'வெய் யனங்கவேள்' என்பதும் பாடம்.