(உ-ம்) “முழவுமுத லரைய தடவுநிலைப் பெண்ணைக் கொழுமட லிழைத்த சிறுபொற் குடம்பைக் கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல் வயவுப்பெட்டை யகவும் பானாட் கங்குன் மன்றம் போழு மினமணி நெடுந்தேர் வாரா தாயினும் வருவது போலச் செவிமுத லிசைக்கு மரவமொடு துயிறுறந் தனவாற் றோழியென் கண்ணே” 1 (குறுந்-301) “கொன்னூர் துஞ்சினு மியாந்துஞ்ச லமே யெம்மி லயல தேழி லும்பர் மயிலடி யிலைய மாக்குர னொச்சி யணிமிகு மென்கொம் பூழ்த்த மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே”2 (குறுந்-138) “ஏறிரங் கிருளிடை யிரவினிற் பதம்பெறாஅன் மாறினெ னெனக்கூறி மனங்கொள்ளுந் தானென்ப கூடுதல் வேட்கையாற் குறிபார்த்துக் குரனொச்சிப் பாடோர்க்குஞ் செவியோடு பைதலேன் யானாக” 3 (கலி-46) எனவரும்,
1. கருத்து: தோழீ! முழவு போலும் அடிப்பாகம் உடைய பனை மரத்தின் பனை மடலிலே கட்டிய கூட்டில் இருக்கும் ஆண் அன்றிலைக் கடிய சூல் கொண்டுள்ள பெண் அன்றில் அழைக்கும்படியான நள்ளிரவில் தலைவன் தேர் வாராதாயினும் வருவது போல எண்ணிக் கொண்டு அத் தேரின் மணியோசையானது செவியில் ஒலிப்பதாகக் கேட்டு அதனால் என் கண்கள் துயில் ஒழிந்தன. 2. கருத்து: தோழீ! நள்ளிரவில் ஊரார் தூங்கினாலும், யான் எம்மூர்ப் பக்கத்தில் உள்ள ஏழிற்பாலை மரத்தின் அப்பால் மயிலின் காலடிபோலும் இலைகளையுடைய நொச்சியானது உதிர்க்கும் பூக்கள் விழுகின்ற போது எழும் ஒலிகளைக் கேட்டு உறங்காதிருந்தேன். 3. கருத்து: தலைவனைக் கூடுதல் விருப்பால் நடுஇரவில் அவன் செய்யும் அடையாளத்தை நோக்கியிருந்து |