“இருள்வீ நெய்த லிதழகம் பொருந்திக் கழுதுகண் படுக்கும் பானாட் கங்கு லெம்மினு முயவுதி செந்தலை யன்றில் கானலஞ் சேர்ப்பன் போலநின்பூ நெற்றிச் சேவலும் பொய்த்தன்றோ குறியே1 இது, தன்னுட் கையாறெய்திடு கிளவி. “புன்கண்கூர் மாலைப் புலம்புமென் கண்ணேபோற் றுன்ப முழவாய் துயிலப் பெறுதியா லின்கள்வாய் நெய்தானீ யெய்துங் கனவினுள் வன்கணார் கானல் வரக்கண் டறிதியோ”2 (சிலப்-கானல் 33 எனவும் இவை குறி பிழைத்துழித் தன்வயினுரிமையும் அவன் வயிற் பரத்தைமையும் படக் கூறியனவாம். குறிபிழைத்தலாவது-புனலொலிப் படுத்தலும் புள்ளெடுப்புதலும் முதலியன. குறியெனக் குறித்த வழி அவனானன்றி அவை வேறோர் காரணத்தான் நிகழ்ந்துழி அதனைக் குறியென நினைந்து சென்று அவை அவன் குறியன்மையின் அகன்று மாறுதலாம். பகற்குறிக்கு உதாரணம் வந்துழிக் காண்க. காணா வகையிற் பொழுது நனி இகப்பினும்-குறி வழிச் செல்லுந் தலைவனை இற்றை ஞான்றிற் காண்டல் அரிதென்று கையறுவதோராற்றாற் பொழுது சேட்கழியினும்.
நொச்சிப்பூ விழும் ஒலியை அவன் செய்யும் அடையாளம் என நினையும் செவியோடு வருந்தியிருந்தேனாக, அவன் பாதியிரவில் என்னை அடையப் பெறாதவனாய் இப்படியே பகற் கூட்டத்தையும் விலக்கினாள் என்று கூறி மனத்தே வருத்தம் கொள்ளும் என்று கூறுவர். 1. கருத்து: பாதியிரவில் எம்போலவே வருந்தும் செந்தலை அன்றிற் பேடையே! கானலஞ் சேர்ப்பன் குறியிடம் வாய்க்கப் பெறாத எம் போலவே நீயும் நின் ஆண் அன்றிற் செய்த குறியை வாய்க்கப் பெறவில்லையோ. 2. கருத்து: துன்பம் மிக்க மாலைப் பொழுதில் தனிமையால் வருந்தும் என் கண்போலத் தூக்கம் இல்லை என்பதில்லாமல் நன்றாகத் தூங்கும் நெய்தற் பூவே! நீ காணும் கனவில் வன்கண்ணராகிய தலைவன் வரக் காண்பையோ? காண்பாயாயின் கூறுக. |