ஏமுறற் பொருட்டு நாணும் மடனும் உளவாம் என்றவாறு. இதனாற் சொல்லியது மேல் தலைவிக்கு இயல்பாய்க் கூறப்பட்ட அச்சமும் நாணும் மடனும் என்பனவற்றுள் வேட்கையால் அச்சம் நீங்கின வழி நாணும் மடனும் நீங்காவோ என்றையுற்றார்க்கு அவை தலைமகற்கு ஏமமாதற் பொருட்டு நீங்காவாம் என்பதூஉம், வேட்கைக் குறிப்புக் கண்ணினான் அறியலாமென்பதூஉம், உணர்த்தியவாறு. என்னை? நாணும் மடனும் இல்லாதாரைத் தலைமக்கள் அவமதிப்பாராதலால். (உ-ம்) “கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்கது இல்”1 (குறள்-1173) இதனுள் ‘கடலன்ன காமம் உழந்தும்’ என்றதனான் வேட்கை மிக்க நிலையினையும் ‘மடலேறாப் பெண்’ என்றமையான் நாணும் மடனும் நீங்கா நிலையினையும் கூறுதல் காண்க. “கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல” (குறள்-1100) இதனுள் அகத்து நிகழ் வேட்கையினைக் கண்ணினால் அறியக் கிடந்தமை கூறியவாறு காண்க. நச். இது, கருமநிகழ்ச்சிக்கண் வரும் நாணும் மடனுந் தந்தன்மை திரிந்து வருமென்கின்றது. (இ-ள்) : சொல்லாக் காமம் இன்மையின்-கரும நிகழ்ச்சியிடத்துக் கூற்று நிகழாத காமம் புலனெறி வழக்கின்கணின்மையின், இரண்டும் ஏமுற நாட்டம் உளவென மொழிப-முற்கூறிய நாணும் மடனுந் தந்தன்மை திரிந்துவர நாட்டுதல் உளவென்று கூறுவர் புலவர் என்றவாறு. என்றது, தோழியிற் கூட்டத்துத் தலைவி கூற்று நிகழ்த்துவ ளென்பதூஉம், நிகழுங்கால் நாணும் மடனும் பெரும்பான்மை
1. கருத்து: கடல்போல் பரந்த காமத்தால் துன்புற்றாளாயினும் அது காரணமாக மடல் ஏறாத பெண்மை போலப் பெருமை வாய்ந்தது இல்லை. |