கூறிய......காலையும் என்பது-தோழி இவ்வாறு கூறியதனை மனம் கொள்ளாத காலத்தினும் என்றவாறு. மனைப்பட்டு.......அருமறையுயிர்த்தலும் என்பது-புறத்து விளையாடுதல் ஒழிந்து மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்குச் சூழ்தலமைந்த அரிய மறைப் பொருளைச் சொல்லலும் என்றவாறு. எனவே சிதையாதவழித் தோழிக்குச் சொல்லாளாம் என்பது போந்தது. வேட்கை மறைக்கப்படுதலின் மறையாயிற்று. ‘கைப்பட்டுக் கலங்கல்’ முதலாகக் ‘கூறிய வாயில் கொள்ளாக் காலை’ யீறாகச் சொல்லப்பட்ட பன்னிரு வகையினும் தலைமகள் தோழிக்கு உரைக்கப் பெறும். அஃது உரைக்குங்கால் மனைப்பட்டுக் கலங்கி மேனி சிதைந்த வழியே உரைக்கப் பெறுவது. ஆண்டும் இதற்கு என் செய்வோம் என உசாவுதலோடுகூடத் தனது காதன்மை தோன்ற உரைக்கும் என்றவாறு. மனைப்படாக்கால் அவனைக் காண்டலால் உரைக்க வேண்டுவதில்லை யென்றவாறாயிற்று. இப்பன்னிரண்டும் ஒருத்தி மாட்டு ஒருங்கு நிகழ்வன அல்ல. இவ்விடங்கள் உரைத்தற்கு இடமென இலக்கணங் கூறியவாறு. அவற்றுள் கைப்பட்டுக் கலங்கியதற்குச் செய்யுள்:- ‘கொடியவுங் கோட்டவும்’ என்னுங் குறிஞ்சிக் கலியுள், “நரந்தநா றிருங்கூந்தல் எஞ்சாது நனிபற்றிப் பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை நலம்பெறச் சுற்றிய குரல்அமை ஒருகாழ் விரன்முறை சுற்றி மோக்கலும் மோந்தனன் நறாஅவிழ்ந் தன்னஎன் மெல்விரற்போது கொண்டு செறாஅச் செங்கண் புதைய வைத்துப் பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன் தொய்யில் இளமுலை இனிய தைவந்து தொய்யலந் தடக்கையின் வீழ்பிடி அளிக்கும் மையல் யானையின் மருட்டலும் மருட்டினன்; அதனால், |