லேனல் காவலி னிடையுற் றொருவன் கண்ணியன் கழலன் தாரன் றண்ணெனச் சிறுபுறங் கவையின னாக வதற்கொண் டஃதே நினைந்த நெஞ்சமொ டிஃதா கின்றியா னுற்ற நோயே”1 (நற்றிணை-128) இது, தோழி வினாவிய வழித் தலைவி கூறியது. ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்’ என்பதனைத் ‘தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்’ (666) என்னுந் தந்திரவுத்தியாகக் கொண்டு அதன்கண் வேறுபட வருவன வெல்லாங் கொள்க. “உரைத்திசிற் றோழியது புரைத்தோ வன்றே யருந்துய ருழத்தலு மாற்றா மதன்றலைப் பெரும்பிறி தாக லதனினு மஞ்சுது மன்னோ வின்னு நன்மலை நாடன் பிரியா வன்பி னிருவருமென்னு மலரதற் கஞ்சினன் கொல்லோ பலருடன் றுஞ்சூர் யாமத் தானுமென் னெஞ்சத் தல்லது வரவறி யானே” 2 (குறுந்-302) இது வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கூறியது.
1. கருத்து: ஆயிழையே! என்னைப் பார்த்து நீ பகலில் எரியும் சுடர்போல் நின் மேனிஒளி சாய்ந்தது. பாம்பு ஊர்ந்த மதிபோல் நுதல் ஒளி மறைந்தது. இப்படி நின் கண் நிகழவும் எனக்கு நீ காரணம் கூறவில்லையாயின் யான் உயிரைப் பிரித்த நிலையையுடையேனாவேன் யானே காண்கிறேன் என்று மிக வருந்தினாய். இப்போது காரணம் கூறுவேன். தினைப்புறம் காவல் உற்றபோது இடையில் கண்ணியனாய்க் கழலனாய்த்தாரனாய் உள்ள ஒருவன் வந்து என் சிறிய புறத்தைத் தழுவினான். அதன் காரணமாக அதையே நினைத்த நெஞ்சத்துடன் யானுற்ற நோய் இப்படியாகியது. 2. கருத்து: தோழீ! கூறுவாயாக. தலைவனைப் பிரிந்ததால் வரும் துயரால் வருந்துதலும் தாங்கேம். அதனால் இறத்தற்கும் அஞ்சுவேம். நம் தலைவன் அவனும் அவளும் பிரியா நண்பினராயினர் எனும் ஊரவர் சொல்லுக்கு அஞ்சினானோ? பலரும் தூங்கும் நள்ளிரவிலும் கூட என் நெஞ்சில் வருவதல்லது நேரில் வந்திலன். இது உயர்ந்ததன்று. |