இளம். இது தலைவன் புணர்ச்சியுண்மை தோழி அறியுந் திறன் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : தலைவன் குறையுற வுணர்தலும் அவன் குறையுறாவழித் தலைவி குறிப்புக் கண்டு உணர்தலும் தானும் தலைவியுங் கூடி யிருந்துழித் தலைவன் வந்தமை கண்டு உணர்தலும் என மூவகைத்துத் தோழி அறிவுடம்படுதற்கண்ண என்றவாறு. மதியுடம்படுதல் எனினும் புணர்ச்சியுணர்தல் எனினும் ஒக்கும். இம் மூன்றினும் ஒன்று கண்டுழி அவரவர் குறிப்பினாற் புணர்ச்சி யுணரும் என்றவாறு. ‘குறையுணர்தல்’ முன் வைத்தார் நன்கு புலப்படுதலின். ‘முன்னுறவுணர்தல்’ அதன்பின் வைத்தார், தலைவி வேறுபாடு கண்டு பண்டையிற்போலாள் என்னும் நிகழ்ச்சியான் முற்றத் துணிவின்மையின். “இருவரு முள்வழி யவன் வரவுணர்தல்” அதன் பின் வைத்தார். ஆண்டுப் புதுவோன்போலத் தலைவன் வருதலானும் தலைவி கரந்த உள்ளத்தளாய் நிற்குமாதலானும் அத்துணைப் புலப்பாடின்மையின் அக்கருத்தினானே மேற்சொல்லப்பட்ட தோழிகூற்று மூவகையாகப் பொருள் உரைத்ததென்று கொள்க. நச். இஃது அத்தோழி சூழ்ச்சி இத்துணைப் பகுதித்து என்கின்றது. (இ-ள்) : குறையுற உணர்தல்-தலைவன் தோழியை இரந்து குறையுற்றவழி உணர்தல். முன்உற உணர்தல்-முன்னம்1 மிகவுணர்தல், இருவரும் உள்வழி அவன் வர உணர்தல்-தலைவியுந் தோழியும் ஒருங்கிருந்தவழித் தலைவன் வருதலால் தலைவன் குறிப்புந் தலைவி குறிப்புங் கண்டுணர்தல். என மதியுடம்படுத்தல் ஒரு மூவகைத்தே-என்று இருவர் கருத்தினையுந் தன் கருத்தினோடு ஒன்றுபடுத்துணர்தல் ஒரு மூன்று கூற்றினையுடைத்து என்றவாறு.
1. கருத்து: முன்னம்-குறிப்பு. தலைவியின் உள்ளக்குறிப்பு உடம்பு மாற்றமும் உணர்தல் அது நாற்றம் முதலிய மிகுதலால் உணர்தல். |