நெடுந்தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்துப் பந்தொடு பெயரும் பரிவிலாட்டி அருளினும் அருளாள் ஆயினும் பெரிதழிந்து பின்னிலை முனியல் மாநெஞ்சே என்னதூஉம் அருந்துயர் அவலந்தீர்க்கும் மருந்து பிறிதில்லை யான்உற்ற நோய்க்கே” 1 (நற்றிணை-140) இதனுள் ‘அருளினும் அருளாளாயினும்’ என்றமையால் கூட்டமின்மையும் ‘பின்னிலை முனியல்’ என்றமையால் இரந்து பின்னிற்பானாகத் துணிந்தமையும், தோழியிற் கூட்டத்து இயற்கைப் புணர்ச்சிக்கு2 ஒருப்பட்டமையும் உணர்க. “நறவுக்கமழ் அலரிநறவு வாய்விரிந்து இறங்கிதழ் கமழும் இசைவாய் நெய்தற் கண்ணித் தலையர் கருங்கைப் பரதவர் நின்னையர் அல்லரோ நெறிதாழ் ஓதி ஒண்சுணங் கிளமுலை ஒருஞான்று புணரின் நுண் கயிற்றுறுவலை நுமரொடு வாங்கிக் கைதை வேலி இவ்வூர்ச் செய்தூட்டேனோ சிறு குடியானே”3
1. கருத்து: நெஞ்சே! கீழ்க்காற்றால் கருத்த மேகம் மேற்கே எழுச்சியுற்றுப் பெய்தமையால் தழைத்த சந்தனத்தின் நறுமணமும் பிற மணமும் சேர்ந்த கூந்தலை வாரி அக்கூந்தல் புலருமிடத்து உதிர்த்த சந்தனத்தின் துகள்கள் காணும் கூந்தலுடைய ஆயக் கூட்டம் நிகழுமாறு தந்தையின் தேர் வழங்கும் முற்றத்தில் பந்தோடு செல்லும் அன்பற்ற தலைவி நம்பால் அருளினும் அருளாளாயினும் அவளைப் பின் நின்று இரங்குதலை வெறாதே. ஏன் எனின் அவளால் வந்த இக்காம நோய்க்கு அவளே மருந்தாவதல்லது மருந்து பிறிதில்லை காண். 2. தோழியிற் கூட்டத்துக்கு முன்னர் இடையீடுபட்டுப் புணர்ச்சியின்றி வந்தமையால் தோழியிற் கூட்டத்தின் முதற் புணர்ச்சி இயற்கைப் புணர்ச்சி எனப்பட்டது. 3. கருத்து: நீயிர் பெரியீர், சிறியேம் யாம் ஆதலின் நும்மொடு எம் தலைவிக்கு மணம் என்பது பொருந்தாது எனத் தோழி தலைவனைச் சேட்படுத்த போது தலைவன் கூறியது இது. தோழியே பரதவர் நின் தந்தையர். ஒரு நாள் சுணங்கு பரந்த இளமுலையா |