பக்கம் எண் :

80தொல்காப்பியம்-உரைவளம்

“கடல் புக்குயிர் கொன்று வாழ்வர் நின்ஐயர்
உடல் புக்குயிர் கொன்று வாழ்வை மன் நீயும்
மிடல்புக் கடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக் கிடுகும் இடையிழல் கண்டாய்”1      (சிலப்-கானல்-17)

இடம் பெற்றுத்தழாஅல் ஆவது-பொய் பாராட்டல் காரணமாத் தலைவி மாட்டு அணிமையிடம் பெற்றுத் தழுவக் கூறல். உதாரணம்,

“கொல்யானை வெண் மருப்பும் கொல்வல் புலியதளும்
நல்லானை நின்னையர் கூட்டுண்டு-செல்வார் தாம்
ஓர் அம்பினானெய்து போக்குவர் யான் போகாமை
ஈர் அம்பினானெய் தாய் இன்று” 2      (திணைமாலை-22)

இடையூறு கிளத்தலாவது-நாண் மடனை நிலைக்களனாக் கொண்ட தலைவி தன் அறிவு நலன் இழந்து ஒன்றும் அறியாது உயிர்த்தனள் அஃது ஒக்குமோ எனின் ஒக்கும். புதிதாய்ப் புக்கார் ஊற்றுணர்வு என்றும் பயிலாத தம் மெல்லியல் மெய்யிற்பட அறிவிழப்பினும் உள் நெக்கு உயிர்க்கும் என்க. அது பற்றிப் புலையன் தொடு தீம்பால் போல் காதல்கூரக் கொம்பானும் கொடியானும் சார்ந்தாளைத் தலைவன் இப்பொழுது இவ்வூற்றின்பிற்கு இடையூறாய் நின்மனத்தகத்து நிகழ்ந்தவை யாவென வினவுதலும்.

நீடு நினைந்திரங்கலாவது-இருவர் இயலும் ஒருங்கு இணைந்தும் தலைவி பெருநாணால் பால்வழி உறுகவென


1. பொருள்: நின் அண்ணன்மார் கடலிற் சென்று மீன் முதலியவற்றைப் பிடித்து உயிர்வாழ்வர். நீயும் அவர் போல் என் உடம்பில் புகுந்து அங்குள்ள உயிரைக் கொன்று வாழ்வாய். நினக்கு நின்முலை பெரும் பாரமாகும் அதனால் சிறுகும் இடை. அதனை இழக்காதே.

2. பொருள்: நின் தமையன்மார் யானைக் கொம்பும் புலித்தோலும் நிறையாகக் கொண்டு ஒழுகுவர். தம் பக்கம் செல்வாரை ஓரம்பினால் எய்து போக்குவர். ஆனால் நீயோ இன்று நான் போகாதபடி இரண்டு அம்புகளால் (கண்களால்) என்னை எய்தாய்.