[குறுஞ்சீர் வண்ணம் இதுவெனல்] 533. | குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும். |
இ--ள் : குற்றெழுத்துப் பயில்வது குறுஞ்சீர் வண்ணம் என்றவாறு. “குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி.” (அகம். 4) என வரும். (221) [சித்திரவண்ணம் இதுவெனல்] 534. | சித்திர வண்ண நெடியவுங் குறியவு நேர்ந்துடன் வருமே. |
இ--ள் : சித்திரவண்ணம் நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் ஒப்ப விராஅய்ச் செய்யப்படுவது என்றவாறு. அது, “சார னாட நீவர லாறே.” என வரும். சித்திரவண்ணமென்பது பல வண்ணம்படச் செய்வதாகலின் அப்பெயர்த்தாயிற்று. (222) [நலிபுவண்ணம் இதுவெனல்] 535. | நலிபு வண்ண மாய்தம் பயிலும். |
இ--ள் : ஆய்தம் பயின்றுவருவது நலிபுவண்ணமாம் என்றவாறு. அஃது, “அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை.” (குறள். 178) எனவும், “னஃகான் றஃகா னான்க னுருபிற்கு.” (தொ. எழு. 123) எனவும் வரும். 1நலிபென்பது, ஆய்தம். (223) [அகப்பாட்டு வண்ணம் இதுவெனல்] 536. | அகப்பாட்டு வண்ண முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே. |
இ--ள் : அகப்பாட்டு வண்ணமென்பது, இறுதியடி இடையடிபோன்று நிற்பது என்றவாறு.
1. நலிபு--நலிந்துச்சரிப்பது. |