இன்மையின் அவையும் முடிபுடையன ஆகாவாயினுங் காயாப் பனையை ஆண்பனையென்றும், காய்ப்பனவற்றைப் பெண்பனையென்றும் வழங்குப. இவையெல்லாம் வழக்காகலிற் செய்யுளுள் வருமாறு அறிந்துகொள்ளப்படும். இவற்றுக்கு மேல் வரையறை கூறும் வழி (606--22) உதாரணங் காட்டுதும் . (3) [இளமைப் பெயர்களுள்; பார்ப்பும் பிள்ளையும் இவற்றிற்குரியவெனல்] 559. | அவற்றுட் பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை. |
இது, நிறுத்தமுறையானே இளமைப்பெயருண் முற்கூறிய பார்ப்பினைக் கூறுவான் அதனோடொப்புமைகண்டு பிள்ளைப் பெயருங் கூறுகின்றது. இ--ள் : இவ்விரண்டும் புள் இளமைக்குரிய என்றவாறு. இவையெல்லாம் இக்காலத்து வழக்கினுள் அரியவாகலின் சான்றோர் செய்யுளுட் காணப்படும்; 1அல்லன வழக்கின்மேற் காட்டுதும். “மேற்கவட் டிருந்த பார்ப்பினங் கட்கு.” (அகம். 31) எனவும், “இல்லிறைப் பள்ளிதம் பிள்ளையொடு வதியும்.” (குறு. 46) எனவும், “பைதற் பிள்ளைக் கிளிபயிர்ந் தாஅங்கு.” (குறுந். 139) எனவும் இவை பருந்தும் ஊர்க்குருவியும் கிளியுமென்னும் பறவைமேல் வந்தன; பிறவும் அன்ன. 2புள்ளுக்குலம் பலவாகலான் இச்சூத்திரத்துள் அடங்கிய மரபு எத்துணையும் பலவாதனோக்கி முதற்சூத்திரத்துட் பார்ப்பினை முற்கூறினானென்பது. (4)
1. அல்லன--வழக்கின் அரியவல்லாதன. 2. புள்ளினம் பலவாதலின், அவற்றிற்கு வரும் மரபாகிய பார்ப்பும் பலவாதனோக்கி அதனை முற்சூத்திரத்து முற்கூறினார் என்றபடி. |