பக்கம் எண் :

628மரபியல்

[குருளை என்னும் பெயர் இவைக்குரிய எனல்]

563. நாயே பன்றி புலிமுய னான்கு
மாயுங் காலைக் குருளை யென்ப.

இது, முறையானே நான்காம் எண்ணு முறைமைக்கணின்ற குருளையாமாறுணர்த்துதல் நுதலிற்று.

இ--ள் : நாயும் பன்றியும் புலியும் முயலும் என நான்குங் குருளையென்று சொல்லப்படும் என்றவாறு.

“திறவாக் கண்ண சாய்செவிக் குருளை.”

(சிறுபாண். 130)

எனவும்,

“விழியாக் குருளை மென்முலை சுவைப்பக்
 குழிவயிற் றுஞ்சுங் குறுந்தாட் பன்றி.”

எனவும்,

“இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை.”

(குறு. 47)

எனவும்,

“குருளை கோட்பட லஞ்சிக் குறுமுயல்
 வலையிற் றப்பாது மன்னுயி ரமைப்ப.”

எனவும் வரும்.

‘ஆயுங்காலை’ என்றதனால்,
“சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை.”

(குறுந். 119)

என்பதுங் கொள்க.

(8)

[நரியும் குருளை என்னும் பெயர்க்குரியது எனல்]

564. நரியு மற்றே நாடினர் கொளினே.

இ--ள் : நரியுங் குருளையெனப்படும் என்றவாறு.

“பிணந்தின் பெண்டிர்க்குக் குருளை காட்டிப்
 புறங்காட் 1டோரி புலவுத்தசை பெறூஉம்.”

என வரும்.

‘நாடினர் கொளினே’ என்றதனானே,

“வெயிலாடு முசுவின் குருளை யுருட்டுங்
 குன்ற நாடன் கேண்மை.”

(குறுந். 38)

என்றாற்போல முசுவிற்குங் குருளைப்பெயர் கொடுக்க.

(9)


1. ஓரி--நரி.