பக்கம் எண் :

பொருளதிகாரம்641

தீண்டியவழி அவ்விரண்டும்படினும் ஒருகணத்துள் ஒருமனமே இருமனப்பட்டு அவ்வுறுப்பிரண்டற்கும் ஊற்றுணர்வுகெடாது கவர்ப்பவாங்கிக் கைக்கொண்டு மீளுமென்பது காட்டலாகாமையானும் அஃதமையாதென்பது.

(27)

[ஓரறிவுடையன இவை எனல்]

583. புல்லு மரனு மோரறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.

இது, முறையானே ஓரறிவுடையன வுணர்த்துதல் நுதலிற்று.

இ--ள் : புறக்காழனவாகிய புல்லும் அகக்காழனவாகிய மரனும் ஓரறிவுடைய; பிறவும் அக்கிளைப்பிறப்பு உள்ளன என்றவாறு.

‘கிளைப்பிறப்பு’ என்பது, கிளையும் பிறப்புமென்றவாறு. கிளையென்பன:--புறக்காழும் அகக்காழுமின்றிப் புதலுங் கொடியும் போல்வன. பிறப்பென்பன:-- மக்களானும் விலங்கானும் ஈன்ற குழவி 1ஓரறிவினவாகிய பருவமும், எஞ்ஞான்றும் ஓரறிவினவேயாகிய என்பில் புழுவுமென இவை. இவை வேறு பிறப்பெனக் கொள்க.

மற்றிவற்றுக்கு அறிவில்லை பிறவெனின்,--2பயிலத் தொடுங்காற் புலருமாகலின் ஓரறிவுடையனவென வழக்குநோக்கிக் கூறினான், இது வழக்குநூலாதலின். அஃதேல், இவை உணர்ச்சியவாயின் இன்பதுன்பங் கொள்ளுமோவெனின்,--அதற்கு 3மனமின்மையின் அது கடாவன்றென்பது. 28)

[ஈரறிவுடையன இவை எனல்]

584. நந்து முரளு மீரறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.

இது, முறையானே ஈருணர்வுடையன வுணர்த்துதல் நுதலிற்று.


1. ஒரறிவினவாகிய பருவம்--பரிச உணர்ச்சிமாத்திரமுடைய பருவம்.

2. தொட்டாற் சுருங்கி என்னுஞ் செடியாலறியலாம்.

3. மனஞ் சூக்குமமாக உண்டென்பதும் இன்பதுன்பங் கொள்ளுமென்பதும் சிலர் கொள்கை.