பக்கம் எண் :

112கவிமணியின் கவிதைகள்

Untitled Document
709 நித்தமும் ஈசன் திருமுடியில் - கங்கை
     நீரைச் சுமந்து திரிவன் என்றால்,
சுத்த ஜலத்தின் பெருமை யெல்லாம் எவர்
     சொல்லி முடிக்கவும் வல்லார்? அம்மா?

710 கந்தையானாலும் கசக்கியுடு - என்னும்
     கற்பனை போற்றி நடப்பாய், அம்மா!
சுந்தர மேனியுண் டாகும், அம்மா! - இந்தச்
     சுத்தத்தின் நன்மை சிறிதோ? அம்மா!

711 மட்டுக்கு, மிஞ்சிடில், வானமுதும் - குணம்
     மாறி விடமாகிப் போகம், அம்மா!
இட்டமுள்ள தோழித் தங்கமே! - நீ இதை
     என்றும் மறவா திருப்பாய், அம்மா!

712 சுண்டப் பசித்துண்ணும் வேளையிலே - பழஞ்
     சோறும் சுவையமு தாகும், அம்மா!
பண்டி நிறைந்த பின்உண் பவர்க்கு - நல்ல
     பாலும் கசப்பாகிப் போகும், அம்மா!

713 வேலைசெய் யாதுசோம் பேறிகளாய் - நிதம்
     வீட்டி லிருப்பது ஆகா தம்மா!
மூலையி லட்ட இரும்பு துரவேறி,
     மோசமாய்ப் போவதும் கண்டிலையோ?

714 வேலைகள் செய்து உடல் வன்மைபெறின் - இந்த
     மேதினி முற்றும் நமதே, அம்மா!
காலனையும் வென்றும் வாழ்வோம், அம்மா! - ஒரு
     காலும் தளர்ச்சியுண் டாகா தம்மா!

715 நோய்கள் உடலை அணுகிடாமல் - ஆயுள்
     நூற்றினும் மேலாய் வளரும், அம்மா!
தீய உணவை அகற்றும், அம்மா! - வேலை
     செய்திட நித்தம் பழகும், அம்மா!

716 நித்தமும், நோயாளி யாகி, ஐயோ! - கட்டில்
     நீங்காது நீண்டு கிடப்பவர்க்கு
எத்தனை செல்வம் இருந்திடினும் - அதில்
     யாதும் பயன்உண்டோ? சொல்லும், அம்மா!