பக்கம் எண் :

136கவிமணியின் கவிதைகள்

Untitled Document
889 ஏழை அழுத கண்ணீர் துடைக்கும்கொடி - அவன்
     இதயம் குளிரஇன்பம் பொழியும்கொடி;
ஊழையும் உப்பக்கம் காணும்கொடி - நித்தம்
     உழைத்துமுன் னேறநம்மை ஊக்கும்கொடி.

890 ராட்டின மல்லாது வேறுபடை - இந்த
     நாட்டினுக் கில்லையென்று நாட்டும்கொடி;
ஈட்டிவாள் குந்தங்கள் பீரங்கிகள் - இருந்
     திருந்து துருவேறச் செய்யும்கொடி.

891 ஊக்கத்தை உள்ளத்தில் ஊட்டும்கொடி - தேச
     ஊழியம் செய்திடத்தூண்டும் கொடி;
ஆக்கமெலாந் தேடிச் சேர்க்கும்கொடி - நம்மை
     ஆண்சிங்க மாகவே ஆக்கும்கொடி.

892 நாடு நமதாகக் கண்டகொடி - அதை
     நாமே அரசாள வைத்தகொடி,
வீடு நமதென்று வீரம்பேசி - இன்று
     வெற்றி முரசறையச் செய்த கொடி.

893 ஒட்டுக் குடிசையின்மீ தாடும்கொடி - உயர்ந்து
     ஓங்கிய மேடையின்மீ தேறும்கொடி;
சட்ட சபைகளிலே தழையும்கொடி - அங்கே
     தங்கும் பெரியோர்மேல் படரும் கொடி.

894 மானம் உருவாக வந்தகொடி - இதை
     மாசுறச் செய்வதும் பாவம், பாவம்;
ஊனில் உயிருள்ள காலமெல்லாம் - மிக
     ஊக்கமாய் நின்றுநாம் காத்திடுவோம்.

வேறு

895 காரிருளும் நீங்குகவே!
     காந்திமதி நிலவுகவே!
பாரில் அறம் பெருகுகவே
     பயிர்களெல்லாம் செழித்திடவே!