பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு149

Untitled Document
968 பன்னாடுஞ் சுற்றிப் பழகியங் கங்குள்ள
நன்னாக ரீகமெலாம் நன்குணர்ந்து - தென்னாடு
காக்கவரும் சேரகுல காவலன்சீர் செந்தமிழின்
பாக்கமழ நாவேநீ பாடு.

969 ஆயிரத்து நூற்றேழில் ஐப்பசிநா லைந்தனில்
தூயவெள்ளி சேரும் சுபதினமே - மேயதிரு
மூலமன் பூண்ட முடிபூண்டு சித்திரைமன்
ஞாலம் புரக்கவந்த நாள்.

970 சீர்பெருகும் மாதேவி சேதுலக்ஷ்மி பாய்மகிழத்
தார்மௌலி சித்திரைமன் தாங்கினான் - பாரதினில்
தாயின் சுமைவாங்கித் தான்சுமந்து கொள்ளுவது
சேயின் கடமையெனத் தேர்ந்து.

971 திருமால் அருளோ? திருமூல மன்செய்
அருமா தவமோ? அறியேன் - உருவாகி
மாமகுடம் சூடி வளரும்செங் கோல் ஏந்திப்
பூமகிழப் போந்ததிப் போது.

972 சித்திரைநாள் வந்த திருமன்னன் மாமகுடம்
அத்தன் அருளால் அணிந்த அந்நாளே - ஒத்த வஞ்சி
மாதைமணந் தான்கோடி மக்களையும் பெற்றினிய
தாதையெனப் பேருமெடுத் தான்.

973 மன்னர் பெருமான் வடிவழகன் சித்திரைமன்
பன்னு கலைதேர்ந்த பண்டிதன் - உன்னும்
கருணையொடு நீதியிரு கண்ணாக வஞ்சி
இருநிலம் காக்க இனிது.

974 நாட்டின் நலமே நமதுநலம் என்றுள்ளந்
தீட்டும் பெருமான் எம் சித்திரைமன் - கூட்டும்
குடியரசின் மன்னவர்செங் கோலரசை மெச்சும்
படியரசு செய்க பரிந்து.

975 திருவஞ்சி நாடாளச் சித்திரைநாள் வந்த
பெருமாளை எந்நாளும் பேணி - மருவும்
நடுநீதி காக்கும், அவன் நற்கருணை காக்கும்,
நெடுமால் அருள்காக்கும் நேர்.