பக்கம் எண் :

210கவிமணியின் கவிதைகள்

Untitled Document
234. பொங்கல் வாழ்த்துக்கள்

1265 புயலும் பருவ மழைபொழிய
     பொருள்கள் எஞ்கும் விலைமலிய
வயலிற் பயிர்கள் வாய்த்துவர
     மக்கள் உள்ளம் மகிழ்ச்சிபெற
அயனும் அரியும் தேடுமரன்
     அருளை வேண்டும் தைப்பொங்கல்
பயிலும் அன்பால் ஒருநால்வர்
     பாடும் கவிபோல் பொங்குகவே!

1266 சாதி சமயம் பற்றிவரு
     சண்டை ஓய்ந்து மறைந்திடவே,
நீதி யெங்கும் நிலவிடவே,
     நெஞ்சிற் கருணை நிறைந்திடவே,
ஆதி இறைவன் ஆனந்தன்
     அருளை வேண்டும் தைப்பொங்கல்
பூத லத்தில் காந்திமகான்
     புகழே போலப் பொங்குகவே!

1267 வார வழக்கு வாராமல்
     வயலிற் பயிர்கள் செய்திடவே,
ஈர நெஞ்சம் உடையவராய்
     எவரும் உலகில் வாழ்ந்திடவே,
ஆரை அணியாய் அணிந்தபிரான்
     அருளை வேண்டும் தைப்பொங்கல்
பாரில் பெரியோர் ஆசிதரும்
     பாக்கி யம்போல் பொங்குகவே!

1268 நாடும் நகரும் சிறந்திடவே,
     நன்செய் புன்செய் செழித்திடவே,
வீடும் குடியும் விளங்கிடவே,
     விற்கும் பொருள்கள் மலிந்திடவே.
ஆடும் தில்லை யம்பலவன்
     அருளை வேண்டும் தைப்பொங்கல்
பாடும் புலவர் நாவிலெழு
     பாக்கள் போலப் பொங்குகவே!