பக்கம் எண் :

266கவிமணியின் கவிதைகள்

Untitled Document

    கோட்டு மாடன் பிள்ளையும் கூடி
இரவு முழுதும் இருந்து, யோசனை
பலவும் செய்து, பலபல வென்று

935   விடியு முன்னம் விரைவா யெழுந்து,
பானையில் கிடந்த பழவோ லைகளும்
முறிப்பெட்டி யிலுள்ள முன்னோ லைகளும்
கைச்சீட் டுகளும் கடச்சீட் டுகளும்
கைச்சாத் துகளும் பொய்ச்சாத் துகளும்,

940   பத்திரச் சுருளும் பகர்ப்புச் சுருளும்,
எல்லாம் சுமடாய்க் கட்டி, இரண்டொரு
முண்டைப் போட்டு மூடிப் பொதிந்து
தோளில் வைத்துச் சுமந்து கொண்டு,
நாகையம் பதியை நாடிச் சென்றனர்.

945   அங்கு,
நீதிக் கெல்லாம் நிலைய மாகியும்
உண்மைக் கெல்லாம் உறைவிட மாகியும்
கருணைக் கெல்லாம் களஞ்சிய மாகியும்
வாழும் நியாய வாதிகள் தங்கும்

950   வீதியை முற்ற விலகிச் சென்று வீண்
விவகா ரங்கள் விளைநில மாகியும்
பொய்கள் அடைக்கலம் புகுமிட மாகியும்
குதர்க்கம் குடிகொளும் குகையிட மாகியும்
திருஅவ தாரம் செய்தன் றிருந்த ஓர்

955   அண்டப் புரட்டன் வக்கீல்ஆ பீஸில்
ஆனைப் பொய்யன் குமஸ்தனை யறிந்து,
காரியம் சொன்னார், கதைகளும் சொன்னார்;
'காரணவ னைப்பல காரணத் தாலே
மாற்றும் படிக்கு வந்தோம்' என்றார்;

960   புற்றை விட்டுப் புறம்போ காமல்
பட்டினி கிடக்கும் பாம்பின் வாயில்
தேரை குதித்துச் சென்று விழுவது
நாகம்முன் செய்த நல்வினைப் பயனோ?
தேரைமுன் செய்த தீவினைப் பயனோ?