பக்கம் எண் :

346கவிமணியின் கவிதைகள்

Untitled Document
  ஊக்கமும் ஒளியும் ஒருங்கு பெற்றது.
வேனில் வெயிலில் வெந்தெரி வேளையில்
பாலை வனத்தில் பறந்து பறந்து
தளர்ந்த பறவையோர் தடாகங் கண்டு
குளித்துக் குடித்துக் குதுகலிப் பதுபோல்
ஆரமு துண்ட அரும்பய னாக
ஆவியும் பேரா னந்த மடைந்து, அவ்
வண்ணல் முகமும் அழகு பொலிந்தது;
அண்ணல் முகம்பொலி வடைய அடைய
மங்கை சுஜாதை மனங்களிப் புற்றுத்
தொழுது போற்றித் துதித்து நின்றனள்;
‘காணற் கரிய கடவுள்நீ தானோ?
படைத்த உணவைப் பருகினை நீயும்
இன்புற் றனையோ?’ என்று வினவினள்.
ஐயனும்,
‘இன்றுநீ அன்பின் எனக்குப் படைத்தது
எவ்வகை உணவாம்? இயம்புக! ’ என்றனன்.
‘பாலொரு நூறு பசுக்கள் கறந்ததை
ஐம்பது பசுக்கள் அருந்த வைத்தனன்;
ஐம்பது பசுக்கள் அளித்த பாலினை
இருபத் தைந்து பசுக்களுக்கு ஈந்தேன்;
இருபத் தைந்தும் இறக்கிய பாலினைப்
பன்னிரு பசுக்கள் பருகிடச் செய்தேன்;
பன்னிரு பசுக்களின் பாலையும் ஏந்திப்
பண்ணையி லுள்ள பசுக்களில் சிறந்த
ஆறு பசுக்கள் அருந்திடக் கொடுத்தேன்
ஆறு பசுக்களும் அளித்த பாலை
வெண்பொற் கமலம் விளக்கி, அதனில்
புத்தம் புதிய புலங்கண் டுழுது,
முரம்பு தட்டி, முக்கனி யிட்டுத்
தெரிந்த விதையைத் திருந்த விதைத்து
விளைந்த நெல்லை, வீசித் தூற்றிக்
கெரிாத்து நாவிக் குற்றி எடுத்த
அணிமுத் தனைய அரிசியை யிட்டுப்