பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு35

Untitled Document
192   முல்லை மலர்ப்பந்தல் இட்டனரோ? - தேவர்
     முத்து விதானம் அமைத்தனரோ?
வெல்லு மதியின் திருமணமோ? - அவன்
     விண்ணில் விழாவரும் வேளையிதோ?

193   அம்புயம் வாடித் தளர்ந்ததம்மா! - அயல்
     ஆம்பலும் கண்டு களிக்குதம்மா!
இம்ப ருலகின் இயல்பிதம்மா! - மதிக்கு
     இன்னார் இனியாரும் உண்டோ? அம்மா!

194   மாற்றம் உலகின் இயற்கையென - இங்கு
     மாந்தரும் கண்டு தெளிந்திடவோ,
போற்றும் இறைவன்இம் மாமதியும் - விண்ணில்
     பூத்து நிலவ விதித்தனனே!

195   அம்புலிக் கூட்டில் முயல்வருமோ? - ஈதோர்
     அண்டப் புளுகோ? அறியேன் அம்மா!
பம்பி யெழுமலை அங்குளதும் - மேலைப்
     பண்டிதர் கண்டகனவே அம்மா!

196   கூனக் கிழவி நிலவினிலே - ராட்டில்
     கொட்டை நூற்கும்பணி செய்வதைஇம்
மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே - காந்தி
     மாமதி யோங்கி வளருதம்மா!

197   சின்னஞ் சிறு வில்லாய்க் கண்டதம்மா! - பின்னர்
     செம்பொற் குடம்போலே தோன்றுதம்மா!
என்ன அதிசயம் பாராயம்மா! - ஈதோர்
     இந்திர சாலமோ! கூறயம்மா!

198   வளர்ந்து வளர்ந்து பெருகுதம்மா! - உடல்
     வட்டந் திருந்தி வருகுதம்மா!
தளர்ந்து தளர்ந்துபின் போகுதம்மா! - கண்ணில்
     சற்றுந் தெரியாமல் ஆகுதம்மா!

199 பாலாழி மீது படர்ந்தவெண்ணெய் - ஒரு
     பந்தா யுருண்டு திரண்டதுவோ?
மேலா யுலகில் ஒளிசெயவே - ஈசன்
     விண்ணக மிட்ட விளக்கிதுவோ!