2 நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் | ‘தமிழன் கொல்லம் ஆண்டு 1091 (கி.பி. 1916) மாசி இதழில் (பக்.98-99) ‘மான்மியம்’ நூலை அறிமுகப்படுத்தி பத்திராதிபர் (பண்டித எஸ்.முத்துசுவாமி பிள்ளை) எழுதியுள்ள குறிப்பு. நாகமணி எடுத்துச் சீமானான நாகமணி மார்த்தாண்ட நாடானையும், வயிரக்கல்லெடுத்துப் பிரபுவான திருநீலகண்டன் செட்டியாரையும் பற்றி அநேகர்அறிந்திருக்கக் கூடும். இன்னும் நிதியெடுத்துச் செல்வந்தரானோர் அநேகர் உளராகப் பலர் கூறுகின்றனர். இப்பொழுதும் பாக்கியமுடையயோர் பலர் ஜீவித்தும் வருகிறார்களாம். ஆதலின் நானும் வெகு காலமாக ஒரு நிதிபெற எண்ணங்கொண்டிருந்தேன். பாழுங் கோவில்களையும் பழைய வீடுகளையும் பென்னம் பெரிய மரப்பொந்துகளையும் மலைக் குகை மலை இடுக்குகளையும் பார்க்க நேர்ந்தால் அந்நிதியாசை என் மனத்திலெழுப்பத் தவறாது. சில சமயங்களில் புற்றுக்களையிடித்துக் குழிதோண்டி நான் அலுத்ததுமுண்டு. எதுவும் வருங்காலந் தானே வரும்! “ஒன்றை நினையாதமுன் வந்து நிற்பினும் நிற்கும்” என்ற முதுமொழி சென்ற வாரத்திற்றான் எனக்கு அனுபவமாயிற்று. ஏதேனுமொரு விஷயமாகச் சாலைக்கடை வீதிக்குப் போகாத நாள் எனக்கு மிகவும் சொற்பமே. சென்ற வெள்ளிக்கிழமை மாலை நான் வழக்கப்படி சாலைக் கடைக்குச் சென்ற பொழுது அஞ்சலாப்பீசண்டை ஒரு பண்டாரத்தைக் கண்ணுற்றேன். அப்பண்டாரம் தலையில் அணிந்திருந்த சடைமுடியும், கழுத்திலும் சடையிலும் அணிந்திருந்த உத்திராக்க மாலைகளும் உடம்புமுழுதும் பூசியிருந்த திருவெண்ணீறும் நெற்றியிலிலங்கிய குங்குமத் திலகமும் சிவபெருமானே உருவெடுத்து வந்ததுபோல் தோன்றச் செய்தது. நான் அவரைச் சந்தித்தபொழுது அவர் ‘முத்திநெறி யறியாத மூர்க்கரொடு முயல்வேனை’ என்ற திருவாசகப்பாவைக் கல்லும் கனிவுறப் பண்ணுடன் பாடிபரமானந்த நிர்த்தனம் செய்து கொண்டு நின்றனர். பாலர் விருத்தர் ஆடவர்பெண்டிர் முதலிய அநேகாயிரம் ஆட்கள் அவரைச் சூழ்ந்தும் நின்றனர். ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தின் மேல்கண் என்ற படி, பாடல் முடிந்ததும் பண்டாரம் மெல்லத் திருவோட்டை எடுத்து ஒவ்வொருவரிடமும் நீட்டத் தொடங்கினார். தொடங்கவே பள்ளங்கண்ட தண்ணீர் |