Untitled Document
பரிகாசமும் மிகவும் நயமாகவும் சரளமாகவும் இருக்கும். லத்தீன் ஆசிரியர்களுள் ஹாரெஸ் (Horace) என்பவர்இந்நெறியில்பிரகசனங்கள் எழுதியமையால் இதனை ஹோரேஷியன் (Horatian) நெறியென்று மேலைநாட்டறிஞர்கள் கூறுவார்கள். இந்நெறியைச் சாந்தநெறி என்று சொல்லலாம். பிறிதொரு நெறி உக்ரநெறியென்று சொல்லலாம். தீமைகளையும் குற்றங்களையும் கண்டவுடன் ஆசிரியனது உள்ளங் கொதித்துப் பொங்குகிறது; எரிமலையினின்று பொங்கி வழியும் நெருப்பாறுபோலக் கண்டனச் சொற்கள் பரந்து பாய்கின்றன. இந்நெறியில் அருவருப்பு எளிதில் உண்டாகும்படியாய் உண்மை சிறிது மிகுத்துக் கூறப்படுவதாகும். லத்தீன் ஆசிரியருள் ஜீவெனல் (Juvenal) என்பவர் இந்நெறியைக் கையாண்டமையால் இதனை ஜீவெனலியன் (Juvenalian) நெறியென்று கூறுவார்கள்.
பிள்ளையவர்களோடு பழகியவர்கள் மேற்சுட்டிய இரண்டு நெறிகளுள் சாந்த நெறியை அவர்கள் மேற்கொள்ளலாம் என்று நினைப்பார்கள். ஆனால் அந்நெறி அவர்கள் நோக்கத்தை நிறைவேற்ற வல்லதல்ல. அவர்கள்கூறுமாறு : காரணத் தீனம் கடியதீனம் கண்டூரத்தில் மருந்து கருத்தாய்க் கொடுத்தா லன்றிக் குணம் ஆகாது | (நாகாஸ்தி. 79-81) ஆதலால் உக்ரநெறி கைக்கொள்ளத் தக்கதாயிற்று. இந்நெறி தம் இயல்பிற்கு முற்றும் மாறாயுள்ளது; இதற்கு ஏற்றதொரு கதாபாத்திரத்தைச் சிருஷ்டித்துக்கதையும் ஒன்று அமைப்பது இன்றியமையாததாய் முடிந்தது. கதையைச் சொல்லுவது சூத பௌராணிகரா? அல்ல. அவருக்கு நாஞ்சினாட்டுக் குடும்பத்தினரின் துன்பத்தை அளவிட முடியுமா? அத்துன்பத்தின் காரணத்தை அடியோடுஒழிக்க வேண்டுமென்று அவரது உள்ளங் கொதித்தெழுமா? இரண்டும் முடியாத காரியம். அக்குடும்பத்திற் பிறந்த ஒருத்திக்குத்தான் இரண்டும் இயலும்; வாய்பேசாது மௌனமாயிருந்து துக்கங்களையெல்லாம் அடக்கி யடக்கி வைப்பாள்; முடிவில் அத்துக்கங்கள் நெடுங்காலமாக அடக்கப்பட்டிருந்த காரணத்தினாலே, குமுறிக் கொந்தளித்து அதிவேகத்துடன் வெளிப்புறப்படும். அந்நிலையில் வருஞ் சொற்கள் உண்மையொடு பட்டனவாகும்; கேட்டோர் இதயத்தைத் தகர்க்கத் தக்கனவாகும். இக்காரணங்களினால் நாஞ்சினாட்டுக் குடும்பத்திலுள்ள பெண்ணொருத்தியின் வாய்ப் பிறப்பாகவே கதையைப் பிள்ளையவர்கள் அமைத்துள்ளார்கள். தன் சுய சரிதையையே அவளும் கூறுகின்றாள்.இச் சுயசரிதையின் மூலமாக எத்தனையோ காட்சிகள் சித்தரிக்கப்படுகின்றன. | |
|
|